இதுமட்டும் செஞ்சா போதும்.. இந்தியாவில் தங்கத்திற்கு பஞ்சமே இருக்காது.. இறக்குமதியும் செய்ய வேண்டாம்!
பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு காலம் தள்ளிப் போடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், இந்த பிரச்சனைக்கு ஒரு நடைமுறை சாத்தியமான மாற்று வழியை பொருளாதார நிபுணர்கள் முன்வைத்துள்ளனர்.
தங்கம் இறக்குமதியை தடை செய்யாமல், இந்தியாவில் உள்ள தங்கத்தை அரசே வாங்கி உள்நாட்டு சந்தைக்கு வழங்கினால், அந்நிய செலாவணியை பெருமளவு சேமிக்க முடியும் என்று கூறுகின்றனர். இந்த யோசனை மக்களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தாமல், நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கம் விற்பனையில் உள்ள சிக்கல்
தற்போது தனிப்பட்ட முறையில் ஒருவர் தங்கம் விற்கும்போது பல சிரமங்கள் உள்ளன. விற்பனையாளர்கள் சந்தை விலையை விட 10 சதவீதம் குறைவாகவே பழைய தங்கத்தை வாங்குகின்றனர். மேலும் 3 சதவீத GST வசூலிக்கப்படுகிறது. இதை தாண்டி தங்கத்தின் தூய்மையும் விலை நிர்ணயத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் மக்கள் தங்கம் விற்க தயங்குகின்றனர். இந்த சிரமங்களைத் தீர்க்கும் வகையில் அரசு ஒரு நாடு தழுவிய தங்கம் வாங்கும் திட்டத்தை கொண்டு வரலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
அரசு தங்கம் வாங்கும் திட்டம்
அரசு (ரிசர்வ் வங்கி மூலம்) தங்கத்தை சந்தை விலையில் இருந்து 2 சதவீதம் குறைவாக விலை நிர்ணயம் செய்து வாங்கலாம். தங்கத்தின் தூய்மையை சரியாக அளவிடும் இயந்திரங்கள், கேமராக்கள், டிஜிட்டல் ரசீது மற்றும் வங்கிக் கணக்குக்கு நேரடி பணப் பரிவர்த்தனை ஆகியவை பயன்படுத்தப்படுத்தி வாங்கினால் பெரிய அளவிலான நிதி புரளும். அதேபோல் இந்த விற்பனைக்கு மூலதன ஆதாய வரி விதிக்கக் கூடாது.
அரசு மக்களிடம் இப்படி வாங்கிய தங்கத்தை நகைத் தொழிலாளர்களுக்கு சந்தை விலையில் விற்கலாம் (GST வசூலிக்கப்படும், ஆனால் அவர்கள் இன்புட் கிரெடிட் பெறலாம்) அல்லது நாணயங்களாக மாற்றலாம். 2 சதவீத இடைவெளி நாணய உற்பத்தி செலவை ஈடுகட்ட போதுமானது.
உள்நாட்டு மறுசுழற்சி அதிகரிக்கும்
இந்தியாவுக்குள் சுமார் 30,000 டன் தங்கம் உள்ளது. இதில் 1 சதவீதம் மட்டும் மறுசுழற்சி செய்தாலே ஆண்டு தேவையில் பாதியை பூர்த்தி செய்ய முடியும். அரசு தங்கம் வாங்கும் திட்டம் மூலம் உள்நாட்டு மறுசுழற்சி அதிகரிக்கும். இதனால் தங்க இறக்குமதியை குறைத்து பெரிய அளவிலான அன்னிய செலவாணியை சேமிக்க முடியும்.
பொதுமக்களுக்கு எந்த சிரமமும் இல்லை
இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், பொதுமக்கள் தங்கம் வாங்குவதை நிறுத்த வேண்டிய அவசியம் இருக்காது. தங்கத்தின் விலை குறைந்தால் தேவை தானாகவே குறையும். ரூபாய் மதிப்பு மேம்பட்டால் இறக்குமதி செலவு குறையும். இந்த நடவடிக்கை மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்காமல், நாட்டின் அந்நிய செலாவணியை சேமிக்க உதவும் ஒரு புத்திசாலித்தனமான தீர்வாக இருக்கும்.














Click it and Unblock the Notifications