வாய்ப்பில்ல ராஜா! விஜய் அரசை கவிழ்க்க நினைத்தால் சிக்கல் திமுகவுக்கா? உதயநிதி அவசரப்பட்டு பேசிட்டாரா
சென்னை: உதயநிதி ஸ்டாலின் ஒரு பொறுப்பான பதவியில் இருக்கிறார். சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்பது அரசியலமைப்புச் சாசனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு பதவி. 59 சட்டமன்ற உறுப்பினர்களுடைய கட்சி குழு தலைவர், 75 ஆண்டுகால பாரம்பரியமிக்க ஒரு கட்சியின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது பொறுப்புணர்வுடன் பேச வேண்டும். துரதிர்ஷ்டவசமாக அவர் பொது மேடையில் பேசுவது போலச் சட்டமன்றத்துக்கு வெளியே நின்று பேசிக் கொண்டிருக்கிறார் என்று கருத்து கூறியிருக்கிறார் மூதத பத்திரிகையாளர் மணி.
சேனல் ஒன்றிற்கு பேட்டி தந்துள்ள பத்திரிகையாளர் மணி, "சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிந்து வெளியில் வந்து உதயநிதி ஸ்டாலின் பேசியிருப்பது ரொம்ப அபத்தமான பேச்சு. மிக மிக அபத்தமான பேச்சு, பக்குவமற்ற பேச்சு. ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையிலான இசைவான போக்கை, இரு கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட சமரசம் என்று பேசுவது ரொம்ப ரொம்ப தவறான, பக்குவமற்ற, தனிப்பட்ட முறையில் காழ்ப்புணர்ச்சி கொண்ட ஒரு பேச்சு.

திமுக அரசு எழுதி கொடுத்த உரையை அன்றைய ஆளுநர் ஆர்.என்.ரவி பேச மறுத்தார், அது சித்தாந்த கோட்பாடு வேறுபாடுகள் என்று நிச்சயமாக இருக்கலாம், நான் அதை மறுக்கவில்லை. ஆனால் இன்றைக்கு இந்த ஆளுநர், திமுக அரசு செய்திருந்த எந்த திட்டங்கள் அல்லது கடைபிடித்த கொள்கைகளுக்கு எதிராக விஜய் அரசு எழுதி கொடுத்த உரையைப் படித்திருக்கிறார்.
உதயநிதியால் அதை ஏற்க முடியவில்லை
உதயநிதி ஸ்டாலினால் விஜய் முதலமைச்சரானதை இன்றளவும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பிரச்சினையின் மூலவேரே அதுதான். அதனால விஜய் அரசு எது செய்தாலும் உதயநிதி ஸ்டாலினுக்கு அது தவறாகத்தான் பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த மனநிலையிலிருந்து திமுகவும், உதயநிதி ஸ்டாலினும் வெளியில் வர வேண்டும். இல்லாவிட்டால் மக்கள் மத்தியில் மேலும் மேலும் அவர்களுடைய செல்வாக்கைச் சிதைக்கும்.
முரண்பாடு இல்லாமல் விஜய் அரசும் ஆளுநரும் இருக்கிறார்கள், விஜய் அரசு எழுதி கொடுத்த உரையை அப்படியே ஆளுநர் படிக்கிறார் என்றால் தவெகவுக்கும் பிஜேபிக்கும் ஒரு உடன்பாடு ஏற்பட்டுவிட்டது' என்கிறார் உதயநிதி.
உதயநிதியின் அபத்தமான குற்றச்சாட்டு
இது மிக மிக அபத்தமான குற்றச்சாட்டு. இந்த குற்றச்சாட்டு எப்பொழுது உண்மையாக இருக்கும் என்றால், கொள்கை அளவில் திமுக கடைபிடித்த ஏதாவது ஒரு விஷயத்தை, இவர்கள் கொள்கை ரீதியாக மாற்றி, அதை ஆளுநர் படித்து ஒரு கொள்கை மாற்றம் நிகழ்ந்திருந்தால் அப்போது இந்த ஸ்டேட்மெண்ட்டில் ஓரளவு உண்மை இருக்கும். ஆனால் அப்படி எதுவுமே இல்லையே!
ஒரு பிரச்சனையை கூட உங்களால் சுட்டிக்காட்ட முடியாது. நீங்க இந்த குற்றச்சாட்டை வைக்கும் பொழுது ஏதாவது ஒரு கொள்கை சமரசத்தை விஜய் அரசு செய்திருந்தால் இதை நீங்க வச்சீங்கன்னா அது கரெக்ட்.
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி
இன்றைக்கு வந்து உதயநிதி ஸ்டாலின் ஒரு பொறுப்பான பதவியில் இருக்கிறார். சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்பது அரசியலமைப்புச் சாசனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு பதவி. 59 சட்டமன்ற உறுப்பினர்களுடைய கட்சி குழு தலைவர், 75 ஆண்டுகால பாரம்பரியமிக்க ஒரு கட்சியின் எதிர்க்கட்சித் தலைவராக இன்றைக்கு அவர் இருக்கிறார். பொறுப்புணர்வுடன் தான் அவர் பேச வேண்டும். துரதிர்ஷ்டவசமாக அவர் பொது மேடையில் பேசுவது போலச் சட்டமன்றத்துக்கு வெளியே நின்று பேசிக் கொண்டிருக்கிறார்.
தவெகவுக்கும், பிஜேபிக்கும் காம்ப்ரமைஸ்?
தவெகவுக்கும், பிஜேபிக்கும் காம்ப்ரமைஸ் ஆயிடுச்சு' என்று கவர்னர் உரையை அடிப்படையாக வைத்து ஒரு குற்றச்சாட்டை இன்னைக்கு முன் வைக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
கொள்கை அளவில் என்ன சமரசம் நடந்தது? அதுதான் அளவுகோள். அரசு எழுதிக் கொடுத்த உரையை ஒரு கவர்னர் அப்படியே படிக்கிறார் என்பது வந்து இரண்டு பேருக்கு இடையே காம்ப்ரமைஸ் ஆகிவிட்டது என்று சொல்வதா? கையில் கிடைக்கிறது எல்லாவற்றையும் எடுத்து இந்த அரசின் மீது வீச வேண்டும் என்ற அந்த ஒரு கோபத்தின் அடிப்படையில், ஒரு காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் தான் இந்த குற்றச்சாட்டுகளை உதயநிதி ஸ்டாலின் வைக்கிறார்.
இந்திய அரசு சாசனத்தால் உருவாக்கப்பட்ட பதவி எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து கொண்டு, இப்படிப்பட்ட ஒரு குற்றச்சாட்டை வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று சொல்ல வேண்டும்? எதிர்க்கட்சி தலைவர் என்கின்ற முறையில் உதயநிதி ஸ்டாலினின் நம்பகத்தன்மையை மேலும் மேலும் சிதைக்கும்.
38 நாள்ல நீங்க என்ன சாதிச்சீங்க
நாங்க செஞ்சதெல்லாம் நீங்க அப்படியே காப்பி பேஸ்ட் பண்றீங்க, 38 நாள்ல நீங்க என்ன பண்ணீங்க?' என்று. யாராவது கேட்டால் சிரிப்பாங்க. 38 நாள்ல ஒரு கவர்மெண்ட் என்ன செய்ய முடியும்? முதல் நாளிலிருந்தே கேள்வி கேட்க ஆரம்பிச்சிட்டாங்க.
அப்படியானால் திமுக கவர்மெண்ட்ல முதல் 30 நாளில் நீங்க என்ன சாதிச்சீங்க? சட்டம் ஒழுங்கு எந்த லெவலில் இருந்தது?' என்று ஒருவர் கூட அதைப்பேசல. மீடியாவை அன்று கண்ட்ரோல் செய்தார்கள்.. ஆளுங்கட்சியா இருந்தாலும் நீங்க மீடியாவை கண்ட்ரோல் பண்றீங்க, எதிர்க்கட்சியா இருந்தாலும் மீடியாவை கண்ட்ரோல் பண்றீங்க. ஆனா மக்கள் மீடியாவை மீறித்தான் ஓட்டுப் போட்டிருக்காங்க.
"வாய்ப்பில்ல ராஜா"
38 நாள்ல நீங்க என்ன சாதிச்சீங்க என்று திமுக கேட்பதே அபத்தமான கேள்வி! தோல்வியின் எதார்த்தத்தை, தோல்வியை திமுகவால் இப்போதுவரை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
திமுகவின் தற்போதைய நோக்கம், விஜய் அரசு இன்றே கவிழ்ந்து, நாளைக்குத் தேர்தல் நடந்து, மறுநாளே தாங்கள் ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்பது போலத்தான் இருக்கிறது. ஒருவேளை இந்த அரசு 6 மாதத்திலோ அல்லது ஒரு வருடத்திலோ கவிழ்கிறது அல்லது கவிழ்க்கப்படுகிறது என்றால், அடுத்து வரும் தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கு வாய்ப்பே இல்லை.. இதையே சீமான் பாணியில் "வாய்ப்பில்ல ராஜா" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications