பவர் கட்டால் பாதிக்கப்பட்ட ப.சிதம்பரம் சந்திப்பு.. சூசகமாக சொன்ன திருமாவளவன்! தவெக டென்ஷன்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதிலிருந்து மின்வெட்டு பிரச்சனை சீரியஸாக வெடித்திருக்கிறது. இந்நிலையில் விசிக சென்னை தலைமை அலுவலகத்தில் ப.சிதம்பரம், திருமாவளவன் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அந்த நேரத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு இருந்ததாக, திருமாவளவன் தனது x பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இவரது பதிவு விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
இது குறித்து தனது x பக்கத்தில், "விசிக தலைமையகமான அம்பேத்கர் திடலுக்கு காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவரும் மேனாள் இந்திய அமைச்சருமான அண்ணன் ப.சிதம்பரம் ஜூன் 19 மாலை 6.00 மணியளவில் வருகை தந்தார். அவரது வருகை எமக்கு பெருமகிழ்வையும் பெருமையும் அளித்தது.

அவர் வந்த சிறிது நேரத்தில் திடுமென மின்சாரம் நின்றுபோனது. வெளிச்சம் இல்லாத நிலையிலும், 'ஏசி' இயங்காத நிலையிலும் கூட நெடுநேரம் (ஒரு மணி நேரத்திற்கும் மேலாக) எம்மோடு இருந்தார். என்பது குறிப்பிடத் தக்கது" என்று பதிவிட்டிருந்தார்.
மின்வெட்டும் தவெகவும்
கடந்த ஆட்சிக்காலத்திலும் மின்வெட்டு பிரச்சனை இருந்தது. ஆனால், சென்னை மற்றும் அதனை சுற்றியிருக்கும் புறநகர் பகுதிகளில் இந்த பிரச்சனை இருந்தது கிடையாது. புயல் காலங்களில் மின் தடை ஏற்படும். அதுவும் கூட 24 மணி நேரத்தில் சரி செய்யப்பட்டு விடும். எனவே சென்னையை பொறுத்தவரை கரண்ட் கட் என்கிற பேச்சுக்கே இடமில்லை.
சென்னையில் மின்வெட்டு
இப்படி இருக்கையில் தவெக அரசு புதியதாக பொறுப்பேற்ற பின்னர் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்படும் மின்வெட்டு காரணமாக, மக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
மக்கள் அதிருப்தி
நாள் முழுவதும் வெளியில் வேலை செய்துவிட்டு வந்து, கொஞ்ச நேரம் நிம்மதியா தூங்கலாம் என்று வீட்டிற்கு வந்தால்.. கரண்ட் இருப்பதில்லை. ஏதோ அரை மணி நேரம், ஒரு மணி நேரம் கட் ஆனால் கூட சமாளிச்சுடலாம்.. ஆனா 4-5 மணி நேரம் கரண்ட் கட் ஆகிறது. கை குழந்தை, நோயாளிகள், கர்ப்பினிகள் இருக்கும் வீடுகளில் நிலைமை மோசமானதாக இருக்கிறது என்று மக்கள் கொந்தளித்துள்ளனர்.
பிரச்சனை என்ன?
என்ன பிரச்சனை என்று மின்வாரிய ஊழியர்களிடம் கேட்டால்.. அவர்கள் பிரச்சனைகளை அடுக்குகிறார்கள். அதாவது மின்வாரியத்தில் வேலை செய்ய போதுமான ஆட்கள் கிடையாது. முன்பெல்லாம் நிரந்தர ஊழியர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் நிவாரணம் கிடைக்கும். இப்போது கான்ட்ராக்ட் ஊழியர்கள்தான் இருக்கிறார்கள். அவர்கள் உயிரை பணயம் வைத்து வேலை செய்ய தயாராக இல்லை. மட்டுமல்லாது போதுமான எண்ணிக்கையிலும் ஊழியர்கள் இல்லை. கடந்த ஆட்சியிலும் இப்படித்தான் இருந்தது.
அதேபோல பருவமழை தொடங்குகிறது எனில், கோடைக்காலத்திலேயே பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டுவிடும். இந்த கோடைக்காலத்தில்தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது என்பதால் பெரிய அளவில் நிர்வாக பணிகள் நடக்கவில்லை. இதெல்லாம்தான் மின்வெட்டுக்கு காரணம் என்று கூறுகின்றனர்.
பறிபோகும் முதலீடுகள்
காரணம் என்னவாக இருந்தாலும் சரி, உடனடியாக மின்வெட்டு பிரச்சனையை அரசு சரி செய்ய வேண்டும். தமிழ்நாடு 2032ம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் பொருளாதாரத்தை எட்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதற்காக முதலீடுகளை ஈர்க்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, ஏஐ நிறுவனங்களுக்கான டேட்டா சென்டர்கள் அமைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
டேட்டா சென்டர் அமைக்க வேண்டும் எனில் தடையில்லா மின்சார வசதி வேண்டும். சென்னையில் இப்படி அடிக்கடி கரண்ட் கட் ஆனால், டேட்டா சென்டர் எல்லாம் அமைக்க முடியாது. நமக்கான வருவாய் வாய்ப்புகள் ஆந்திராவுக்கும், கர்நாடகாவுக்கும்தான் போகும் என்று அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த பின்னணியில்தான், தவெக உடன் கூட்டணியில் இருந்தாலும், மின்வெட்டு பிரச்சனையை சூசகமாக திருமாவளவன் வெளிப்படுத்தியிருக்கிறார். இது தவெகவினரை டென்ஷனாக்கியிருக்கிறது.












Click it and Unblock the Notifications