இதெல்லாம் எனக்கு பிடிக்காது.. கீர்த்தனா, ஜெகதீஸ்வரியை கடிந்து கொண்ட விஜய்.. என்ன நடந்தது?
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் உள்ளே வெளியே தெரியாத கடுமையான உட்கட்சி பூசல் நிலவி வருகிறதாம். வெளியே எல்லாம் சுமூகமாக இருப்பது போல தெரிந்தாலும் உள்ளே காட்டுத்தீ ஒன்று புகைந்து கொண்டு இருக்கிறதாம்.
தமிழக தொழில் துறை அமைச்சர் கீர்த்தனாவுக்கும் சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கும் இடையே நடக்கும் முட்டல் மோதல்-பனிப்போர் தான் தவெக அமைச்சர்களிடம் பேசுபொருளாகி வருகிறது.

அமைச்சர்கள் கீர்த்தனாவுக்கும் ஜெகதீஸ்வரிக்கும் சண்டை
தென் மாவட்டங்களில் உள்ள இந்த இரண்டு பெண் அமைச்சர்களிடையே நடக்கும் ஈகோ யுத்தம் விஜய் வரை கொண்டு செல்லப்பட்டுள்ளது. விஜய் இந்த சண்டை தெரிந்து கடுப்பாகி உள்ளதாக கூறப்படுகிறது. இரண்டு பெண் அமைச்சர்களும் விருதுநகர் மாவட்டம் என்பதால், இருவரும் முறுக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவரை ஒருவர் மட்டம் தட்டும் வேலைகளில் குதித்திருக்கிறார்கள். மாவட்டத்தின் அதிகாரப்புள்ளியாக மாறப்போவது யார் என்ற கேள்வி இருவருக்கும் உள்ளது. அதை பிடிக்கவே மாறி மாறி இரண்டு பேருமே காய் நகர்த்தி வருகிறார்களாம்.
அதிகாரிகள் யாருக்கு முக்கியத்துவம் தர வேண்டும் ?
அரசு நிகழ்வுகளில் அமைச்சர்களை அழைப்பதில் அதிகாரிகள் யாருக்கு முக்கியத்துவம் தர வேண்டும்? யாரை பின்னுக்குத் தள்ள வேண்டும்? அரசு நிகழ்ச்சிக்காக அடிக்கப்படும் போஸ்டர்களில் யாருடைய பெயர் முன் வரிசையில் போல்டாக இருக்க வேண்டும்? தவெக கட்சியில் யார் சீனியர்? யார் ஜூனியர்? என்கிற யுத்தத்தை இரு பெண் அமைச்சர்களும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதனால் விருதுநகர் மாவட்ட அதிகாரிகளும், விருது நகர் மாவட்ட தவெக கட்சி நிர்வாகிகளும் இடியாப்பச் சிக்கலில் மாட்டிக் கொண்டு முழிக்கிறார்கள்.
வெளியே எல்லாம் சரியாக இருக்கிறது என்று காட்டிக்கொள்ள விரும்புகிறார்கள். இதற்காக அவர்கள் சமீபத்தில் செல்பி கூட வெளியிட்டனர். ஆனால் அந்த செல்பி எல்லாம் சும்மா ஜுஜுபி என்கிறார்கள் நெருக்கமானவர்கள். இருவருக்கும் இடையிலான மோதல் நாம் நினைப்பதை விட மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது.
முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ள மாநில உளவுத்துறையினர்
இதுகுறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ள மாநில உளவுத்துறையினர், ''பெண் அமைச்சர்களின் ஈகோ யுத்தம் எல்லை மீறி போகிறது. ஆட்சிக்கு கெட்டப் பெயரை உருவாக்குகிறது. சரி செய்யப்பட வேண்டும் '' என்கிற ரீதியில் சொல்லியுள்ளனர்.
பெண் அமைச்சர்கள் இரண்டு பேரும் நடந்து கொள்ளும் விதம் சரியில்லை
இதனையடுத்து, அமைச்சர் புஸ்சி ஆனந்திடம் பேசிய முதல்வர் விஜய், ''அவர்களை அமைதியாக இருக்க சொல்லுங்கள்.. சரியில்லை.. தென்மாவட்ட அமைச்சர்களிடம் என்ன நடக்கிறது? என பாருங்கள். பெண் அமைச்சர்கள் இரண்டு பேரும் நடந்து கொள்ளும் விதம் சரியில்லை. ஈகோயிஸ்ட்டாக இருப்பது எனக்குப் பிடிக்கவில்லை என அவர்களிடம் எச்சரிக்கையாக சொல்லிவிடுங்கள்'' என தெரிவித்திருக்கிறார்.
இதில் ஒரு விஷேசம் என்னவெனில், ஜெகதீஸ்வரி அமைச்சராக புஸ்சி ஆனந்த் சிபாரிசு செய்திருந்தார். கீர்த்தனா அமைச்சராக ஆதவ் அர்ஜுனா சிபாரிசு செய்திருந்தார் என்பதுதான் என்கிறார்கள் தவெக சீனியர் நிர்வாகிகள். இரண்டு பெண் அமைச்சர்களுக்கு எச்சரிக்கை செய்ய முதல்வர் விஜய் உத்தரவிட்ட விவகாரம் தான் அமைச்சர்களிடையே பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறதாம்.
- சிறப்பு நிருபர் எழில்












Click it and Unblock the Notifications