கோவையில் தொழிலதிபர் வீட்டில் 1000 சவரன் திருட்டு! மருமகன் குடும்பத்தினர் மீது புகார்
கோவை: கோயம்புத்தூரில் மாமனாரின் வீட்டில் இருந்த ரூ 10 கோடி மதிப்புள்ள 1000 பவுன் தங்க நகைகளைத் திருடியதாக மருத்துவர், அவரது குடும்பத்தைச் சேர்ந்த இருவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் கணபதி நகரைச் சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் எஸ்.சண்முகபாண்டியன் (67). இவர் தனது வீட்டில் இருந்த 1000 பவுன் தங்க நகைகளை தனது மருமகன் திருடியதாக போலீஸில் புகார் கொடுத்திருந்தார்.

இந்த திருட்டு சம்பவத்தில் மருமகனின் தாய், சகோதரிக்கும் தொடர்பு இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார். இதுகுறித்து போலீஸார் கூறியிருப்பதாவது: சண்முகபாண்டியனின் மகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் மருத்துவருடன் திருமணம் நடந்தது.
இந்த நிலையில் மகள், மருமகன் குடும்பத்தினரை காளப்பட்டியில் உள்ள தனது வீட்டில் தங்கிக் கொள்ளுமாறு சண்முகபாண்டியன் கூறினாராம். அந்த வீட்டின் லாக்கர் சாவியையும் மருமகன் மீது நம்பிக்கை வைத்து அவர் ஒப்படைத்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் சண்முகபாண்டியனின் மகளிடம், அந்த வீட்டை தனது பெயருக்கு மாற்றித் தருமாறு மருமகன் வற்புறுத்தியதாக சொல்லப்படுகிறது. இதனால் சண்முகபாண்டியன் குடும்பத்தினருக்கும் மருமகன் குடும்பத்தினருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது.
இதையடுத்து கடந்த 2025 ஆம் ஆண்டு சண்முகபாண்டியன் அந்தச் சொத்தை மூன்றாம் நபர் ஒருவருக்கு ரூ 15 கோடிக்கு விற்றாராம். இதனால் மருமகன் குடும்பத்தினர் அந்த வீட்டை விட்டு திடீரென காலி செய்துவிட்டு சென்றனராம்.
இது சண்முகபாண்டியனுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதாம். இதையடுத்து லாக்கர் சாவியை தருமாறு மருமகனிடம் சண்முகபாண்டியன் கேட்டாராம். அதற்கு மருமகன் மறுக்கவே, லாக்கரை உடைத்து பார்த்த சண்முகபாண்டியனுக்கு அதிர்ச்சி காத்திருந்ததாம்.
அந்த லாக்கரில் இருந்த 1000 பவுன் தங்க நகைகள் காணாமல் போனது தெரியவந்தது. மருமகன் குடும்பத்தினரிடம் இதுகுறித்து சண்முகபாண்டியன் கேட்டபோது முதலில் தனக்கு தெரியாது என்று கூறிய அந்த குடும்பத்தினர் 100 சவரன் நகைகளை மட்டுமே திருப்பித் தந்துவிட்டு கொலை மிரட்டல் விடுத்தனர். மீதமுள்ள 900 சவரன் நகைகளை கொடுக்கவில்லை என தெரிகிறது.
இதுகுறித்து மாநகர குற்றப்பிரிவில் சண்முகபாண்டியன் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications