கல்யாணம் ஆன புதுசு! நள்ளிரவு 3 மணிக்கு உதவின்னு மெசேஜ் செய்ததும் ஓடி வந்த சமந்தா! நாத்தனார் உருக்கம்
ஹைதராபாத்: நள்ளிரவு 3 மணிக்கு குடும்ப வாட்ஸ்ஆப்பில் மெசேஜ் போட்ட நாத்தனாருக்கு உதவ ஓடி சென்ற நடிகை சமந்தா, விடிய விடிய அவரை கவனித்துக் கொண்டதாக ராஜ் நிடிமொருவின் தங்கை ஷீத்தல் நிடிமொரு நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து இன்ஸ்டாவில் ஷீத்தல் தனது பதிவில் கூறியிருப்பதாவது: சமந்தாவின் திரைப்படங்களை நான் இதற்கு முன்னர் ஒன்றை கூட பார்த்ததில்லை. ஆனால் அவர் எனக்காக நள்ளிரவு 3 மணிக்கெல்லாம் கண் முழித்ததை நான் பார்த்தேன்.

சமந்தாவுக்கும் என் அண்ணன் ராஜுவுக்கும் திருமணம் நிகழ்ந்த சில நாட்களில் ஹைதராபாத்தில் உள்ள சமந்தாவின் வீட்டில் நான் தங்கியிருந்தேன். அப்போது ஒரு நாள் இரவு எனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.
அதாவது கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு குளிர் ஜூரம் வந்துவிட்டது. தூக்கி தூக்கி போட்டது, என் தலை வெடிப்பது போல் அத்தனை வலி. என்னால் படுக்கையை விட்டு எழுந்து போய் மாத்திரைகளையோ கூடுதல் பெட்ஷீட்களையோ எடுக்க முடியாத நிலை இருந்தது.
இதனால் என்ன செய்வதென்றே தெரியாமல் மிகவும் தயக்கத்துடன் எனது குடும்ப வாட்ஸ் ஆப் குரூப்பிற்கு மெசேஜ் போட்டேன். அதில் "இந்த வீட்டில் மருந்து எங்கே இருக்கிறது, எனக்கு மிகவும் குளிராக இருக்கிறது. கூடுதல் பெட்ஷீட்கள் எங்கே இருக்கின்றன என தெரியவில்லை" என போட்டிருந்தேன்.
நான் மெசேஜ் அனுப்பிய சில நிமிடங்களுக்குள் "நான் வருகிறேன்" என சமந்தா மெசேஜ் செய்திருந்தார். அவர் நினைத்திருந்தால் வேறு யாரையாவது எழுப்பியிருக்கலாம். ஏன் என் அண்ணனை எழுப்பி கூட ,"உன் தங்கைக்கு உடம்புக்கு முடியவில்லையாம், நீ போய் பார்த்துக் கொள்" என கூறியிருக்கலாம். எனக்கு மருந்துகளை கொடுத்துவிட்டு, வேறு யாரைவிட்டாவது கூட என் கூடவே இருந்து பார்த்து சொல்ல இருந்திருக்கலாம். ஆனால் சமந்தாவே, நான் இருந்த அறைக்கு வந்தார்.
அப்போது அங்கு கூடுதலாக பெட்ஷீட்கள் ஏதும் இல்லை. இதனால் அவர் பெரிய பெரிய டவல்களை எல்லாம் எடுத்து என் மீது சுற்றி விட்டார். பின்னர் எனக்கு மருந்தும் தண்ணீரையும் கொண்டு வந்தார். என்னை தொட்டு பார்த்து உடல் வெப்பநிலை எப்படி இருக்கிறது என பார்த்தார்.
எனக்கு மிகவும் உணர்ச்சி மிகுந்த விஷயம் என்னவென்றால் அன்று முழுவதும் அவர் தூங்கவே இல்லை. திருமணம் நடந்து சில நாட்கள்தான் ஆனது. அவருக்கு நிறைய சடங்கு சம்பிரதாயங்கள் நடந்திருக்கும். என்னை கவனித்துக் கொண்ட அடுத்த சில மணி நேரங்களில் ஷூட்டிங்கிற்கு சென்றுவிட்டார்.

அப்போது நானும் அவரது ஷூட்டிங்கிற்கு சென்றேன். புடவையை கட்டிக் கொண்டு சண்டை காட்சிகளில் நடித்துக் கொண்டிருந்தார். அவர் முகத்தில் அத்தனை சிரிப்பு! என்னை பார்த்ததும் அவர் நலம் விசாரித்தார். இன்னமும் அவரது முகத்தில் இருந்த அக்கறை எனக்கு நினைவில் இருக்கிறது. ஒரு இரவு முழுக்க தூங்காமல் மீண்டும் என் எதிரே வந்து அவரால் எப்படி நிற்க முடிந்தது? அவர் எத்தனை சோர்வாக இருந்தார் என்பது குறித்து யாருக்குமே தெரியாது, அவர் தூங்காததும் யாருக்கும் தெரியாது.
அவரது இளகிய மனம் குறித்தும் யாருக்கும் தெரியாது. "மா இன்ட்டி பங்காரம்" என்ற படத்தின் டைட்டில் என்னை சிரிக்க வைத்தது. ஏனென்றால் மா இன்ட்டி பங்காரம் படத்தை பார்க்கும் முன்பே பங்காரத்தை பார்த்துவிட்டேன் என்றார். ஷீத்தலின் இந்த பதிவை பார்த்த பலரும் சமந்தாவை பாராட்டுகிறார்கள். நல்ல குடும்பத்தில் சமந்தா வாக்குப்பட்டிருக்கிறார் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications