கிலோ அரிசி ரூ.60... தக்காளி கிலோ ரூ.40 - காய்கறி விலை எவ்ளோ தெரியுமா?
தமிழகத்தில் பருவமழை பொய்த்துப்போனதால் நெல் சாகுபடி குறைந்து போனது. இதனால் அரிசி விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. தக்காளி விலை, காய்கறி விலைகளும் அதிகரித்துள்ளன.
சென்னை: பருவமழை பொய்த்துப்போனதால் தமிழகம் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதகாலமாக அரிசி விலை கிடு கிடு என உயர்ந்து வருகிறது. நல்ல தரமான சாப்பாடு அரிசி விலை கிலோ 60 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இட்லி அரிசி விலை ஒருகிலோ 40 ரூபாயாக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் குறுவை, சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டதன் எதிரொலியாகவே அரிசி விலை அதிகரித்துள்ளது. வழக்கமாக ஆந்திரம் மற்றும் கர்நாடக மாநிலங்களிலிருந்தே அதிக அளவில் நெல் கொள்முதல் செய்யப்படும். தற்போது வறட்சி பாதிப்பு அதிகமாக உள்ளதால்
சத்தீஸ்கர், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் வியாபாரிகள் செல்ல வேண்டிய நிலை உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

அரிசி விலை உயர்வு
வட மாநிலங்களிலிருந்து லாரிகள் மூலம் தமிழகத்திற்கு நெல் கொண்டு வரப்படுகிறது. ஒரு கிலோ நெல் விலை ரூ.20இல் இருந்து ரூ.25 ஆக அதிகரித்துள்ளது. மேலும், நெல் மூட்டைகளை ஏற்றுவதற்கு ஒரே நேரத்தில் அதிக லாரிகள் தேவைப்படுதால் லாரி வாடகை கட்டணமும் உயர்ந்துள்ளதால் தரமான பொன்னி புழுங்கல் அரிசி விலை ரூ.60 ஆக உயர்ந்துள்ளது.

பருப்புகள் விலை
தமிழகத்தில் பருப்புகளின் விலை கடந்த ஆண்டு ஒரு கிலோ 200 ரூபாய்க்கு கூட விற்பனையானது. இந்த ஆண்டு துவரம் பருப்பு ஒரு கிலோ 75 ரூபாய்க்கும், பாசிப்பருப்பு 70 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. அதே நேரத்தில் உளுந்தப்பருப்பு கிலோ 105 ரூபாய்க்கும், கடலைப்பருப்பு கிலோ ரூ.110க்கும் விற்பனையாகிறது.

காய்கறி விலைகள்
சென்னை கோயம்பேடு சந்தையில், அவரைக்காய் விலை ரூ.35 ஆகவும், புடலங்காய் விலை ரூ.35 ஆகவும் உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் முருங்கைக்காய் விலை ரூ.40லிருந்து ரூ.13 ஆகவும் குறைந்துள்ளது. வெண்டைக்காய் விலை 90 ரூபாயாக உயர்ந்துள்ளது.
அவரைக்காய், புடலங்காய்,டிஸ்கோ கத்தரிக்காய், வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் வரத்து குறைந்ததால், அவற்றின் விலைகள் கடந்த வாரத்தை விட இரு மடங்கு உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.

முருங்கை விலை குறைவு
மழை இல்லாத காலங்களில் முருங்கைக்காய் உற்பத்தி அதிக மாக இருக்கும். அதனால் தற்போது வரத்தும் அதிகமாக உள்ளது. அதனால் விலையும் வீழ்ச்சி அடைந் துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு முருங்கைக்காய் விலை ரூ.100 வரை இருந்தது குறிப்பிடத்தக்கது என்றார்.

தக்காளி விலை
கடந்த ஒரு மாதமாக தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி ஒரு கிலோ ரூ.40க்கு விற்கப்பட்டது. வெளிச் சந்தைகளில் சில்லறை விலையில் ரூ.45 வரை விற்கப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரிக்கு முன்பு, 6 மாதங்களாக தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து, கோயம்பேடு சந்தையில் கிலோ ரூ.10க்கும் குறைவாக விற்கப் பட்டது.

விலை உயர்வு
வெயில் தொடங்கியுள்ள நிலையில் கடந்த சில தினங்களாக தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. நேற்றைய நிலவரப்படி கிலோ ரூ.40க்கு விற்பனை செய்யப்பட்டது. சில்லறை சந்தைகளில் கிலோ ரூ.45க்கும் விற்கப்படுகிறது. வார்தா புயலின்போது, பல தக்காளி செடிகள் அழிந்ததன் காரணமாக தக்காளி உற்பத்தி குறைந்ததுடன், சந்தைக்கு வரத்தும் குறைந்துள்ளது. அதனால் கடந்த ஒரு மாதமாக தக்காளி விலை உயர்ந்து வருவதாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.

விலை மேலும் உயரும்
பல மாவட்டங்களில் நிலவும் வறட்சி காரணமாக உற்பத்தி குறைந்ததால், அவரை மற்றும் புடலங்காய் விலை யும் உயர்ந்துள்ளது. அடுத்த 15 நாட்களுக்குப் பிறகு, காய்கறி விலை மேலும் உயரும் என்று வியாபாரிகள் கூறியுள்ளனர்.

விலை உயர்வுக்குக் காரணம்
கடந்த சில ஆண்டுகளாக விவசாய நிலங்களின் சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது. இந்த நிலையில் பருவமழையும் பொய்த்துப் போனதால் நெல் சாகுபடி குறைந்து அரிசி விலை அதிகரித்துள்ளது. அதே போல வறட்சியினால் காய்கறி விலைகளின் உயரும் உயர்ந்து வருகிறது.












Click it and Unblock the Notifications