மாநிலத்திற்குள் சரக்குகளை கொண்டு செல்ல ஜூன் 2ஆம் தேதி முதல் இ - வே பில் அமல்
ஜூன் 2ஆம் தேதி முதல் மாநிலத்துக்குள் சரக்குகளை எடுத்துச் செல்ல, இ - வே பில் பெறும் முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
Recommended Video
சென்னை: தமிழகத்தில் ஜூன் 2ஆம் தேதி முதல் மாநிலத்துக்குள் சரக்குகளை எடுத்துச் செல்ல, இ - வே பில் பெறும் முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதன் பின், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்துச் செல்லும் சரக்குகளுக்கு, கண்டிப்பாக இ - வே பில் பெறுவது அவசியம்.
கடந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல், சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரிமுறை அமல்படுத்தப்பட்டன. ஜிஎஸ்டி வரிமுறை அமல்படுத்தப்பட்டாலும், சரக்குகளை ஓர் இடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கும், வேறு மாநிலங்களுக்கும் கொண்டு செல்வதற்கு பயன்படும் சரக்கு பரிமாற்றம் (Stock Transfer) என்னும் முறைக்கு எந்தவிதமான ஆவணங்களை பயன்படுத்துவது என்பதில் வர்த்தகர்களுக்கும் தொழில்துறையினருக்கும் பெரும் குழப்பம் இருந்து வந்தது.
வர்த்தகர்களின் நிலைமையை புரிந்துகொண்ட ஜிஎஸ்டிஎன் ஆணையம், சரக்கு பரிமாற்றத்திற்கு தேவையான இ-வே பில் (E-Way Bill) படிவங்கள் தயாரிக்கும் பணிகள் நடந்துவருவதாகவும், கூடிய விரைவில் அவை முழுமைபெற்று நடைமுறைக்கு வரும் என்று நம்பிக்கை தெரிவித்தது.
அதுவரையில் சரக்கு பரிமாற்றத்திற்கு பழைய நடைமுறையை பின்பற்றுமாறு ஜிஎஸ்டிஎன் ஆணையம் தெரிவித்தது. ஜிஎஸ்டிஎன் ஆணயம் சொன்னதுபோலவே, கடந்த பிப்ரவரி மாதம் முதல் சோதனை அடிப்படையில் இ- வே பில் முறையை பயன்படுத்திக்கொள்ள அனுமதித்தது. கூடவே, இ-வே பில் முறை ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்றும் அறிவித்தது.
தொழில் துறையினரும், வர்த்தகர்களும் எதிர்பார்த்ததுபோலவே, இ-வே பில் முறை கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. கூடவே 50000 ரூபாய் வரையில் சரக்குகளை வேறு மாநிலங்களுக்கு கொண்டு செல்வதற்கு இ-வே பில் தேவையில்லை என்றும், வரி விலக்கு அளிக்கப்பட்ட பொருட்களுக்கும் இ-வே பில் தேவையில்லை என்றும் அறிவித்தது. அதேபோல, மாநிலத்திற்குள் சரக்குகளை கொண்டு செல்வதற்கு, இ-வே பில் முறை ஜூன் மாதம் முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவித்தது.
ஜூன் 1 முதல் அனைத்து மாநிலங்களும், இன்ட்ரா ஸ்டேட் இ - வே பில் முறையை அமல்படுத்த வேண்டும் என. மத்திய அரசு ஏற்கனவே உத்தரவிட்டது. தற்போது ஜூன் 3ஆம் தேதி வரை, அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக வணிகவரித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தமிழகத்தில் ஜூன் 2ம் தேதி முதல் மாநிலத்துக்குள் சரக்குகளை எடுத்துச் செல்ல இ - வே பில் பெறும் முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதன் பின் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்துச் செல்லும் சரக்குகளுக்கு கண்டிப்பாக இ - வே பில் பெறுவது அவசியம்.
தற்போது மாநிலங்களுக்கிடையே சரக்குகளை எடுத்துச் செல்ல நாள் ஒன்றுக்கு 60 ஆயிரம் இ - வே பில்கள் பதிவு செய்யப்படுகின்றன. மாநிலத்துக்குள் நடைமுறைப்படுத்தும்போது இது பல மடங்கு அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.