டிசிஎஸ் சம்பள உயர்வு.. இவங்களுக்கு மட்டும் ஸ்பெஷல்.. ஐடி ஊழியர்கள் குஷி!
இந்திய ஐடி சேவை துறையின் முன்னணி நிறுவனமாக விளங்கும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) தனது ஊழியர்களுக்கு மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வருடாந்திர சம்பள உயர்வை அளிப்பதாக தனது காலாண்டு முடிவுகளில் அறிவித்துள்ளது.
பொதுவாக சம்பள உயர்வு என்பது ஒவ்வொரு ஊழியர்களுக்கும் மாறும் என்பதால் தனிப்பட்ட முறையில் ஊழியர்களின் செயல்திறனை மதிப்பீடு செய்து அவர்களுடைய ரேட்டிங்-ஐ மின்னஞ்சல் வாயிலாக அனுப்பும். கடந்த ஆண்டு 4-7 சதவீதம் வரையிலான சம்பள உயர்வை சராசரியாக கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த ஆண்டு சிறப்பாக பணியாற்றும் உயர் செயல்திறன் கொண்ட ஊழியர்களுக்கு இரட்டை இலக்க சதவீதத்தில் (double-digit) சம்பள உயர்வு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்த சம்பள உயர்வு 10 சதவீதம் அல்லது அதற்கு அதிகமாகவும் இருக்க வாய்ப்புள்ளது.
டிசிஎஸ் நிறுவனம் தனது மார்ச் காலாண்டு நிதி முடிவுகளை அறிவித்த அதே நேரத்தில் இந்த சம்பள உயர்வு அறிவிப்பையும் வெளியிட்டது. அனைத்து தகுதியான ஊழியர்களுக்கும் அனைத்து தர நிலைகளிலும் வருடாந்திர சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது. அதில் உயர் செயல்திறன் கொண்ட ஊழியர்கள் இரட்டை இலக்க சதவீத உயர்வைப் பெறுவார்கள் என்று டிசிஎஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது.
இந்திய ஐடி துறை ஏஐ தொழில்நுட்ப தாக்கத்தால் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டு வரும் வேளையில் சம்பள உயர்வு, புதிய பணியாளர்கள் பணியமர்த்தல் மற்றும் பணிநீக்கம் ஆகியவை தற்போது உன்னிப்பாக கவனிக்கப்படும் நிலையில், டிசிஎஸ்-ன் இந்த முடிவு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. இந்நிறுவனம் தொடர்ந்து புதிய ஒப்பந்தங்களைப் பெற்று வருவதாலும், எதிர்கால வர்த்தக வாய்ப்புகள் மீது அச்சம் அனைத்து நிறுவனங்களுக்கும் இருந்து வருகிறது.
ஏஐ (ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்), கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் போன்ற புதிய துறைகளில் திறமையான ஊழியர்களுக்கான போட்டி அதிகரித்துள்ள நிலையில், இந்த சம்பள உயர்வு ஊழியர்களை நிறுவனத்துடன் தக்கவைக்க உதவும் என்று தொழில்துறை வல்லுநர்கள் கருதுகின்றனர். சிறப்பாக பணியாற்றும் ஊழியர்களுக்கு அதிக உயர்வு கொடுப்பதன் மூலம் நிறுவனம் தனது சிறந்த பணியாளர்களை தக்கவைக்க முடியும்.












Click it and Unblock the Notifications