மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத டிஏ உயர்வு- அமைச்சரவை ஒப்புதல்
டெல்லி: அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 62 ஆகவும், அகவிலைப்படியை 10 சதவீதமாகவும் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப் படியை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது அனைவரும் அறிந்ததே.
இதுகுறித்து மத்திய அரசு ஆலோசித்து வந்தது. இதையடுத்து மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை மேலும் 10 சதவீதம் உயர்த்தி அறிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் அகவிலைப்படி 10 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் பெறும் அகவிலைப்படி 90 சதவீதம் ஆனது.
இப்போது வழங்கப்பட்டு உள்ள 10 சதவீத அகவிலைப் படி உயர்வுக்கு இன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்குகியுள்ளது. அதை தொடர்ந்து அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகும்.
இந்த அகவிலைப்படி உயர்வையும் சேர்த்து, மத்திய அரசு ஊழியர்கள் 100 சதவீத அகவிலைப்படி பெற்றுள்ளனர். இதனால் 50 லட்சம் ஊழியர்களும், 3 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் பெறுவார்கள்.
மேலும்,மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது தற்போது 60 ஆக உள்ளது. இதை 62 ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.
இன்று கூடிய பிரதமர் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 10 சதவீதம் உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கவும் மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
மார்ச் 1 ஆம் தேதி முதல் இந்த நடைமுறை கடைபிடிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் மார்ச் 1 ஆம் தேதிக்குப் பிறகு ஓய்வு பெற இருப்பவர்கள் பயனடைவார்கள்.