"பெரிய நாமம்.." தங்கத்தை காலி செய்யும் பிட்காயின்? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக்! நோட் பண்ணுங்க
சென்னை: தங்கம் விலை அதிகமாக இருப்பதால் அதை இப்போது வாங்கலாமா என்பது குறித்து பலரும் யோசித்து வருகிறார்கள். மற்றொரு புறம் பிட்காயின் விலை சரியும் நிலையில், அதை வாங்கிப் போட்டால் வரும் காலங்களில் லாபம் பார்க்கலாமா என்ற கேள்வியும் பலருக்கும் இருக்கிறது. தங்கத்தைப் போல பிட்காயினில் லாபம் பார்க்கலாமா? அது எப்படி இருக்கும் என்பது குறித்து பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.
கொரோனா சமயத்தில் பறக்கத் தொடங்கிய தங்கம் விலை இப்போது எங்கோ போய்விட்டது. இதனால் ஏழை மற்றும் மிடில் கிளாஸ் மக்களால் தங்கம் வாங்குவது குறித்து யோசிக்கவே முடியாத நிலை இருக்கிறது.

தங்கம் விலை
இப்போது கூட கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், நேற்று மீண்டும் அதிகரித்துவிட்டது. நேற்று ஒரே நாளில் மட்டும் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் சென்னையில் ரூ.70 அதிகரித்துள்ளது. இப்போது கிராம் ஒன்று ரூ.8010க்கு விற்பனையாகி வருகிறது. நேற்று ஒருவ சவரன் தங்கம் ரூ.64,080க்கு விற்பனையானது.
இது ஒரு பக்கம் இருக்க பிட்காயின் மீது சிலருக்குப் பார்வை திரும்பியுள்ளது. அதிலும் குறிப்பாக இளைஞர்கள் பிட்காயினில் முதலீடு செய்வது குறித்து தீவிரமாக யோசித்து வருகிறார்கள். அதிலும் டிரம்ப் வந்த பிறகு அவர் பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சிகளுக்கு ஆதரவான கொள்கைகளையே எடுப்பார் எனக் கூறப்படுகிறது. மற்றொரு கிரிப்டோ ஆதரவாளரான எலான் மஸ்கிற்கும் இப்போது அமெரிக்க அரசியல் முக்கிய இடம் இருக்கிறது. இதனால் வரும் காலங்களில் அமெரிக்கா மேலும் மேலும் கிரிப்டோவுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுக்கும் எனத் தெரிகிறது.
பிட்காயின்
இதனால் இப்போது பிட்காயின் விலை சரிந்துள்ள நிலையில், அதில் முதலீடு செய்தால் நல்ல லாபத்தை அள்ளிவிடலாம் என இளைஞர்கள் கருதுகிறார்கள். ஆனால், இது உண்மை தானா.. பிட்காயினும் தங்கத்தைப் போலப் பாதுகாப்பானதாக இருக்குமா.. பிட்காயின் தான் அடுத்த தங்கமா என்பது போன்ற கேள்விகளுக்குப் பிரபல பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன் விளக்கமளித்துள்ளார்.
ஆனந்த் சீனிவாசன்
இது தொடர்பாக அவர் தனது யூடியூப் பக்கத்தில், "பிட்காயின் விலை 20% வரை சரிந்துள்ளது. ஒரு பிட்காயின் 83 ஆயிரம் டாலர் என்பது வரை போய் இருக்கிறது. கிரிப்டோ கரன்சி மீது எனக்கு ஒரு போதும் நம்பிக்கை இருந்ததே கிடையாது. இது பழைய கால போஸ்டர்களை கலெக்ட் செய்வது போன்றது தான். இதற்கு நடைமுறை வாழ்க்கையில் எந்தவொரு பயனும் இருக்காது. தங்கத்திற்கும் கிரிப்டோவுக்கும் அடிப்படையில் வேறுபாடுகள் உள்ளன. எதாவது கஷ்டம் என்றால் தங்கத்தை அடகுக் கடையில் வைத்தால் பணம் கொடுப்பார்கள். கிரிப்டோவை வைத்தால் பெரிய நாமம் தான் கிடைக்கும்" என்றார்.
மேலும் அவர், "நான் பல காலமாகத் தங்கம் குறித்துப் பேசி வருகிறேன். நான் சொன்னது முதலே தங்கத்தை வாங்கி இருந்தால் உங்கள் கைகளில் 400 கிராம் இருந்து இருக்கும். அதுவே பல லட்ச ரூபாய் வரை உங்களுக்கு லாபம் தரும்" என்றார்.
சரியும் பிட்காயின்
இந்தியாவில் இப்போது ஒரு பிட்காயின் விலை ரூ.73.25 லட்சமாக இருக்கிறது. கடந்த ஜனவரி 31ம் தேதி தான் இதன் மதிப்பு ரூ.91.32 லட்சம் என உச்சத்தில் இருந்தது. இப்போது வெறும் 30- 35 நாட்களில் அதன் மதிப்பு சுமார் ரூ. 18 லட்சம் வரை சரிந்துள்ளது. இதுபோல பிட்காயின் விலை தாறுமாறாக உயரவும் சரியவும் வாய்ப்பு இருக்கிறது என்பதால் முதலீட்டாளர்கள் இதை எச்சரிக்கை உடனேயே அணுகுவார்கள்.
வாரன் பபெட்
மேலும், உலகின் தலைசிறந்த முதலீட்டாளர்களில் ஒருவரான வாரன் பபெட் கூட பிட்காயின் தேவையில்லாத ஒன்று என்றே கூறி வருகிறார். முன்பு ஒரு சமயம் அவர் உலகில் உள்ள அனைத்து பிட்காயின்களையும் 25 டாலருக்கு கொடுத்தால் கட நான் அதை வாங்க மாட்டேன் என்றும் பிட்காயினால் நிச்சயம் அமெரிக்க டாலருக்கு மாற்றாக இருக்காது என வாரன் பபெட் ஒருமுறை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications