ஹரியானாவில் ராகுலுக்கு கை மேல் பலன்.. பாஜகவுக்கு பெரிய ஷாக்.. சிஎன்என் நியூஸ் 18 எக்சிட் போல் முடிவு
சண்டிகர்: ஹரியானாவில் ஹாட்ரிக் வெற்றியை பெறும் பாஜகவின் கனவு பலிக்காது என்றே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் காட்டுகின்றன. காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளதாக முன்னணி ஊடகங்கள் நடத்திய கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. சிஎன்என் நியூஸ் 18 நிறுவனத்தின் கருத்துக்கணிப்பு முடிவுகளை இங்கே பார்க்கலாம்.
ஹரியானாவில் கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் உள்ளது. 90 தொகுதிகளை கொண்ட ஹரியானாவில் கடந்த 2014-ம் ஆண்டில் 47 இடங்களை வென்ற பாஜக எளிதாக ஆட்சியை பிடித்தது. ஆனால், கடந்த 2019 சட்டமன்றத் தேர்தலில், 40 தொகுதிகள் மட்டுமே பாஜகவுக்கு கிடைத்தது. பெரும்பான்மைக்கு தேவையான ஒரு சீட் இல்லாததால், 10 தொகுதிகளை வென்ற மாநிலக் கட்சியான ஜேஜேபி-ன் ஆதரவுடன் கூட்டணி ஆட்சியமைத்தது பாஜக.

தற்போது ஹரியானா சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைவதால் அங்கு இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. ஒரே கட்டமாக 90 தொகுதிகளுக்கும் தேர்தல் இன்று நடைபெற்று முடிந்துள்ளது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன. இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் பாஜகவிற்கு பெரும் அதிர்ச்சியை கொடுப்பதாக அமைந்துள்ளது.
சி.என்.என் நியூஸ் 18 வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகளின் படி காங்கிரஸ் ஹரியனாவில் ஆட்சி அரியணையை ஏறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கருத்துக்கணிப்பு முடிவுகள் விவரம் வருமாறு:-
பாஜக: 24
காங்கிரஸ்: 58
ஆம் ஆத்மி: 0
ஜேஜேபி+: 2
ஐ.என்.எல்.டி: 2
மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சி அமைத்த பிறகு நடைபெறும் சட்டமன்ற தேர்தல் என்பதால் நாடுமுழுவதும் இந்த தேர்தல் முடிவுகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளும் பாஜக, ஹரியானாவில் தோல்வியை தழுவும் என்றே சொல்லியிருப்பதால் அக்கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதே நேரத்தில் ஹரியானாவில் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு இருந்தனர்.
விவசாயிகள் பிரச்சினையை முன்வைத்து ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் அனல் பறக்க பிரசாரம் மேற்கொண்டனர். ராகுலின் இந்த பிரசாரத்திற்கு கை மேல் பலன் கிடைக்கும் என்பதையே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் காட்டுவதாக காங்கிரஸ் கட்சியினர் கூறி வருகிறார்கள். அதேவேளையில் ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் அடி விழும் என்று கருத்துக்கணிப்புகள் சொல்கின்றன. எது எப்படியோ இன்னும் 3 நாட்களில் தேர்தல் முடிவுகள் அனைத்திற்கும் விடை கொடுத்துவிடும்.












Click it and Unblock the Notifications