1 மணிக்கு பாஜக.. 2 மணிக்கு காங்கிரஸ்.. சீனியர் நிர்வாகி டிவிஸ்ட்.. அதிரும் ஹரியானா
சண்டிகர்: ஹரியானா சட்டமன்ற தேர்தல் களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. இன்றுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. ஏற்கனவே காங்கிரஸ் - பாஜக இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் இன்று மதியம் வரை பாஜகவில் இருந்த அந்தக் கட்சியின் மூத்த தலைவர் அசோக் தன்வார், திடீரென்று அந்தக் கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தல் வருகிற 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் ஹரியானாவில் தேர்தல் பிரசாரம் உச்சகட்ட பரபரப்பில் உள்ளது. பாஜக - காங்கிரஸ் பல்வேறு வியூகங்களை அமைத்து வருகின்றன. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பெரும்பான்மை பெற்று யார் ஆட்சியமைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

போட்டி பலமாக இருப்பதால், அரசியல் களத்தில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. அந்த வகையில் பாஜகவில் இருந்த முன்னாள் எம்பி அசோக் தன்வார் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். இன்று மதியம் ஒரு மணியளவில் கூட அவர் பாஜவுக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார்.
அடுத்த ஒரு மணி நேரத்தில், அதாவது மதியம் இரண்டு மணியளவில் அவர் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். இதை துளியும் எதிர்பார்க்காத பாஜக அதிர்ச்சியில் உறைந்துள்ளது. மறுபக்கம் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

அசோக் தன்வார் தடாலடியாக கட்சி மாறுவது இது முதல்முறை இல்லை என்பது மட்டுமே பாஜகவுக்கு இருக்கும் ஒரே ஆறுதல். அவர் ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியில் தான் இருந்தார். 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் சிர்சா தொகுதியில் வெற்றி பெற்றார். 2019 ஆம் ஆண்டு வரை அவர் காங்கிரஸ் எம்பியாக இருந்தார்.
2021 ஆம் ஆண்டு அசோக் தன்வார் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அங்கு நீண்ட காலம் எல்லாம் அவர் நீடிக்கவில்லை. அடுத்த ஆண்டே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலையொட்டி அவர் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகினார்.
ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பதில் உடன்பாடு இல்லை என்றும் விளக்கமளித்தார். இதையடுத்து அசோக் தன்வார் கடந்த ஜனவரி மாதம் பாஜகவில் இணைந்தார். தொடர்ந்து கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சிரா தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அங்கு காங்கிரஸ் வேட்பாளர் குமாரி செல்ஜாவுக்கு எதிராக அவர் தோல்வியை தழுவினார்.
பாஜகவில் அவர் மிகவும் ஆக்டிவாகவே இருந்துள்ளார். தேர்தல் பிரசார பிரிவு நிர்வாகி, நட்சத்திர பேச்சாளர் என்று பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். அவர் பாஜக வேட்பாளர்களுக்காக ஆன்லைனிலும், ஆப்லைனிலும் தீவிரமாக பரப்புரை ஆற்றி வந்தார். இன்று மதியம் ஒரு மணி வரை அவர் பாஜகவுக்கு ஆதரவான பிரசாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். ஒரு மணி நேரத்திலேயே ராகுல் காந்தியை சந்தித்து மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
காங்கிரஸில் இணைந்ததை அவரே தன் எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார். உடனடியாக பாஜகவில் இருந்தபோது போட்ட ட்வீட்களை அவர் நீக்கிவிட்டார். தன்வார் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்.பில் பி.ஹெச்.டி முடித்துள்ளார். மீண்டும் தாய் கழகத்தில் இணைந்துள்ளார் என்று அவரை காங்கிரஸ் தலைவர்கள் வரவேற்று வருகின்றனர்.












Click it and Unblock the Notifications