”டீசல் பரோட்டா”.. எலேய்.. என்னடா பண்ணி தொலையுறீங்க? ”பேதி”யை கிளப்பிய தாபாவால் சர்ச்சை!
சண்டிகர்: டீசலில் பரோட்டா தயாரித்த சண்டிகர் தாபாவால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. இதனையடுத்து சண்டிகர் தாபா உரிமையாளர் பகிரங்க மன்னிப்பு கேட்டிருக்கிறார்.
புரோட்டா, பரோட்டா, ரொட்டி.. இவை எல்லாம் 'இளசு'களின் அன்றாட உணவுகளில் ஒன்றாகிவிட்டன. மைதாவில் தயாரிக்கப்படும் இந்த பரோட்டா குறித்து பல்வேறு எச்சரிக்கைகள் விடப்பட்டாலும் ஒரு 4 புரோட்டா அண்ணே தொடங்கி அதுவும் பன் பரோட்டா, வாழை இலை கிளி பரோட்டா, கொத்து பரோட்டா என வெரைட்டியாக வெளுத்துவிட்டு குதூகலமடைகின்றனர் இளைஞர்கள்.

அண்மைக்காலமாக குழந்தைகளை, மாணவர்களை ஆட்டுவித்த "ஷவர்மா" மோகம் ஒருவழியாக மறையத் தொடங்கிவிட்டது. ஆனால் பன்னெடுங்காலமாக பிடித்துக் கொண்டிருக்கும் பரோட்டா மோகம்தான் விஸ்வரூபமாகிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பஞ்சாப்- ஹரியானா மாநிலங்களின் பொது தலைநகரான சண்டிகரின் தாபா ஒன்றில் தயாரிக்கப்பட்ட பரோட்டா இப்போது பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது. உணவுகள் தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவிடும் பதிவர் அமன்பிரீத் சிங் தான் இந்த பரோட்டா குறித்து வெளியிட்டிருந்தார். அப்பதிவில், பரோட்டாவை தயாரிக்கும் மாஸ்டர், கறுப்பு நிற ஆயில் ஒன்றை அதன் மீது ஊற்றுகிறார்.. இது என்ன எனக் கேட்டால் டீசல்.. டீசல்.. டீசல் பரோட்டா என கொஞ்சமும் தயங்காமல் சிரித்தபடி சொல்கிறார்.. இந்த வீடியோவை பார்க்கும் நமக்கு நெஞ்சு பதறுகிறது. இத்தகைய டீசல் பரோட்டா தாபா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குரல்கள் வெடித்தன.
ஆனால் சண்டிகர் தாபா உரிமையாளர் இதுபற்றி விளக்கம் அளித்திருக்கிறார். சண்டிகர் தாபா உரிமையாளர் சன்னி சிங் கூறுகையில், யாரும் டீசலில் பரோட்டா தயாரிக்க மாட்டார்கள். அதை யாரும் சாப்பிடவும் முடியாது. நாங்களும் அப்படி டீசலில் பரோட்டாவை தயாரிக்கவும் இல்லை. சமூக வலைதளப் பதிவர் ஒருவர் வேடிக்கையாக இந்த டீசல் பரோட்டாவை செய்திருந்தார். இப்படி ஒரு பரோட்டாவை யாருமே சமைக்கவும் மாட்டார்கள். இதற்காக நாங்கள் மன்னிப்பு கேட்கிறோம். தற்போது அந்த பதிவரும் எங்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார். நாங்கள் சுகாதாரமான உணவுகளைத்தான் வழங்குகிறோம். மக்களின் உயிரோடு ஒரு போதும் நாங்கள் விளையாடவில்லை என்கிறார்.
விளையாட்டுக்கு ஒரு அளவே இல்லையா?












Click it and Unblock the Notifications