குதிரை பேரத்துக்கு ஜிஎஸ்டி! அப்போ பாஜவுக்கு தான் நஷ்டம்! நிர்மலா சீதாராமனை கலாய்த்த எதிர்க்கட்சிகள்
சண்டிகர்: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது ‛Horse Racing' என்பதற்கு பதில் ‛Horse Trading'க்கு ஜிஎஸ்டி விதிக்கப்படும் என வாய்த்தவறி கூறினார். இந்நிலையில் தான் நிர்மலா சீதாராமன் உண்மையை கூறியதாக எதிர்க்கட்சியினர், நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
Recommended Video
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 47 வது கூட்டம் சண்டிகரில் துவங்கி நடந்தது. 2 நாள் நடந்த இந்த கூட்டம் நேற்று முடிவடைந்தது.
இப்படியும் மக்களா.. 6 கோடி பேர்.. தினமும் 5 லிட்டர்! கோக கோலாதான்
இந்த கூட்டத்தில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள், பிரதிநிதிகள் பங்கேற்றனர். தமிழகம் சார்பில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றார்.
வரி உயர்த்த ஒப்புதல்
இந்த கூட்டத்தில் பல்வேறுமுக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. எல்இடி விளக்குகளுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும், சூரியசக்தியில் இயங்கும் ஹீட்டர்களுக்கான ஜிஎஸ்டி வரி 5இல் இருந்து 12 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் பேனா மை, கத்தி, பிளேடு ஸ்பூன்களுக்கு ஜிஎஸ்டி வரி 12ல் இருந்து 18 சதவீதமாக கூட்டப்பட்டுள்ளது. கிரைண்டர், அரிசி ஆலை இயந்திரங்களுக்கான வரி 5 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
சீதாராமன் பேட்டி
இந்நிலையில் கூட்டத்தின் முடிவில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சூதாட்டி விடுதிகள், ஆன்லைன் விளையாட்டுகள், குதிரை பந்தயம், லாட்டரி ஆகியவற்றுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வசூலிப்பது தொடர்பான முடிவை ஜிஎஸ்டி கவுன்சில் ஒத்திவைத்துள்ளது. அவற்றுக்கான வரி மதிப்பீட்டு முறை குறித்து சம்பந்த்ப்பட்ட மாநிலங்களில் வேண்டுகோள்களை பரிசீலித்து ஜூலை 15ம் தேதிக்குள் அறிக்கை அளிக்கும்படி மேகாலய முதல்வர் கன்ராட் சங்மா தலைமையிலான அமைச்சர்கள் குழுவிடம் கேட்டு கொண்டுள்ளேன்'' என்றார்.
குதிரை பந்தயம்... குதிரை பேரமானது
இந்த வேளையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குதிரை பந்தயம் தொடர்பாக ஆங்கிலத்தில் ‛Horse racing' என்பதற்கு பதில் ‛Horse Trading' என வாய்த்தவறி கூறினார். இதை உடனே அவர் சரிசெய்தார். பொதுவாக எம்எல்ஏக்களை விலை கொடுத்து வாங்குவதை தான் குதிரை பேரம்(Horse Trading) என கூறுவர். ஏற்கனவே பல மாநிலங்களில் பாஜக குதிரை பேரத்தில் ஈடுபட்டு ஆட்சியை கவிழ்த்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.
மகாராஷ்டிராவுடன் ஒப்பீடு
இந்த சூழலில் தான் தற்போது மகாராஷ்டிராவில் ஆட்சி மாற்றம் நடந்துள்ளது. அதிருப்தி சிவசேனா எம்எல்ஏக்களின் தங்களின் ஆதரவை வாபஸ் பெற்றதால் உத்தவ் தாக்கரே தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த அதிருப்தி எம்எல்ஏக்களின் பின்னணியில் பாஜக இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறி வந்தன. நேற்று மகாராஷ்டிரா முதல்வர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்த நிலையில் தான் நிர்மலா சீதாராமன் ‛Horse Racing' என்பதற்கு பதில் ‛Horse Trading' என கூறியுள்ளார்.
காங்கிரஸ், சிபிஎம் கட்சி
இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனை பகிர்ந்து எதிர்க்கட்சிகள் மற்றும் நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள பிரிவு தலைவர் பவன் கேரா தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛நிர்மலா சீதாராமன் வாக்குப்பெட்டிக்கு வெளியே சிந்திக்கும் திறன் கொண்டுள்ளார் என்பது எனக்கு தெரியும்'' என தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் செயலாளர் வினித் புனியா தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛குதிரை பேரத்துக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கும் நிர்மலா சீதாராமனின் முடிவை வரவேற்கிறேன்'' என கூறியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தனது டுவிட்டர் பக்கத்தி்ல, ‛‛உண்மை வெளிவருகிறதோ? குதிரை பேரத்துக்கு ஜிஎஸ்டி'' என கூறியுள்ளார்.
பாஜக தான் அதிக வரி செலுத்தும்
இதேபோல் நெட்டிசன்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுபற்றி ஒருவர் கூறுகையில், ‛‛குதிரை பேரத்துக்கு இந்தியாவில் ஜிஎஸ்டி வரி விதித்தால் அதிகளவில் பாஜக தான் வரி செலுத்தும்'' என தெரிவித்துள்ளார். இன்னொருவர், ‛‛குதிரை பேரத்துக்கு ஜிஎஸ்டி வரி விதித்தால் அது பாஜகவுக்கு தான் நஷ்டத்தை ஏற்படுத்தும்'' என கூறியுள்ளார். மேலும் இதுபோன்று பலர் தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.