100 குடும்பத்தினர் இருந்தோம்.. இப்ப 15 பேர்தான் இருக்கிறோம்.. நூவில் முஸ்லீம் பெண் கண்ணீர்
சண்டீகர்: ஹரியானாவில் வன்முறை வெடித்த நிலையில் மேற்கு வங்கத்தில் இருந்து அகதிகளாக வந்த 100 முஸ்லீம் குடும்பத்தில் வெறும் 15 பேர் மட்டும் இருப்பதாக கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.
ஹரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் நேற்று முன் தினம் விஸ்வஇந்து பரிஷத் ஊர்வலம் நடந்தது. இதற்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மீது சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

அப்போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதல் கலவரமாக வெடித்தது. இந்த கலவரத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 2 ஊர்க்காவல் படைவீரர்கள் உள்பட 4 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் கலவரம் அருகில் இருக்கும் குருகிராம் மாவட்டத்திற்கும் பரவியது. அங்கு வீடுகள், வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
அந்த சம்பவத்தின் போது ஒருவர் பலியாகிவிட்டார். ஹரியானா வன்முறைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து நூ மற்றும் குருகிராமில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இணையதள சேவைகளும் முடக்கப்பட்டன. கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன.
இந்த நிலையில் மேற்கு வங்கத்திலிருந்து அகதிகளாக வந்த முஸ்லீம் சமூகத்தை சேர்ந்தவர்கள் மீது வன்முறை நடப்பதாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து 25 வயது ஷமீம் ஹூசைன் கூறுகையில் நேற்று மாலை சிலர் எங்கள் பகுதிக்கு வந்து முஸ்லீம்கள் எல்லாம் இந்த பகுதியை விட்டு வெளியேறுங்கள் என்றனர். எங்களிடம் எங்கள் மாநிலமான மேற்கு வங்கத்திற்கு போவதற்கு கூட காசு இல்லை. நாங்கள் உள்ளூர் கடைகளில் கடன் வாங்கி எங்கள் பிழைப்பை நடத்தி வருகிறோம்.

எனக்கு ஏதாவது ஆனாலும் பரவாயில்லை, ஆனால் எனக்கு ஒரு வயது மகன் இருக்கிறான். அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் உள்ளூர் மக்களுக்கும் நான் கேட்டுக் கொள்வது எப்படியாவது எங்களுக்கு பாதுகாப்பு கொடுத்து உதவுங்கள் என்பதுதான் என கையெடுத்து கும்பிட்டு கண்ணீருடன் கேட்டார். இதுகுறித்து ஹூசைனின் தாய் கூறுகையில் நேற்று இரவு 7 மணிக்கு 60 பேர் எங்கள் பகுதிக்கு வந்தனர்.
எங்களிடம் அவர்கள் எதுவும் பேசவில்லை. அவர்கள் வீட்டு உரிமையாளர்களிடம் பேசினர். இந்த பகுதிகளில் உள்ள முஸ்லீம்களை காலி செய்யுமாறு கூறினர். இதனால் எல்லாரும் போய்விட்டார்கள். நாங்கள் 100 குடும்பத்தினர் இங்கு வசித்து வந்தோம். ஆனால் தற்போது 156 முதல் 16 குடும்பத்தினர் மட்டுமே இருக்கிறோம். எங்களால் வாழ முடியவில்லை. ஏனென்றால் எங்களிடம் பணம் இல்லை என அழுதார்.












Click it and Unblock the Notifications