காரை நிறுத்து.. பேட்டிக்கு நடுவே முடக்கப்பட்ட பஞ்சாப் சி.எம் கான்வாய்.. இறங்கி வந்து செய்த சம்பவம்!
சண்டிகர்: பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் கான்வாய் அம்மாநில பாஜகவினர் மூலம் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜகவினரின் இந்த போரட்டத்தை சரண்ஜித் சிங் எதிர்கொண்ட விதமும் கவனம் பெற்றுள்ளது.
Recommended Video
நேற்று முதல்நாள் பஞ்சாப்பில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சி பாதுகாப்பு காரணங்களால் ரத்து செய்யப்பட்டது. பஞ்சாப்பிற்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்ற பிரதமர் மோடி, அங்கு நடந்த போராட்டம் காரணமாக நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு கிளம்பும் சூழ்நிலை ஏற்பட்டது. பஞ்சாப்பில் இருக்கும் ஹுசைன்வாலா என்று பகுதியில் உள்ள தேசிய தியாகிகள் நினைவு இடத்திற்கு செல்லும் போது இந்த சம்பவம் நடைபெற்றது.
இதில் மாநில அரசு சரியாக பாதுகாப்பு வழங்கவில்லை என்று பஞ்சாப் காங்கிரஸ் அரசு மூலம் மத்திய உள்துறை அமைச்சகம் புகார் அளித்துள்ளது. பிரதமருக்கு பாதுகாப்பு வழங்கும் உள்துறை, எஸ்பிஜிதான் சொதப்பிவிட்டது என்று பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

எதிர்ப்பு
இந்த நிலையில்தான் பஞ்சாப்பில் முதல்வர் சரண்ஜித் சிங்கிற்கு அம்மாநில பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து பாஜகவினர் போராட்டம் செய்து வருகிறார்கள். பிரதமருக்கு பாதுகாப்பு வழங்க பஞ்சாப் முதல்வர் மறுத்துவிட்டார். அவர் இதனால் பதவி விலக வேண்டும் என்று கூறி பஞ்சாப்பில் முதல்வர் செல்லும் இடங்களில் எல்லாம் பாஜகவினர் கடுமையாக போராட்டம் செய்து வருகிறார்கள்.

பஞ்சாப் மோடி
இந்த நிலையில்தான் நேற்று பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் தனது காரிலேயே செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தபடி பயணம் மேற்கொண்டார். அப்போது அவரின் கான்வாயை மறிக்கும் வகையில் பாஜகவினர் சாலையின் இருப்பக்கமும் நின்று கொண்டு இருந்தனர். அவரின் கான்வாய் வேகமாக செல்ல முடியாத வகையில் தடுத்துக்கொண்டு இருந்தனர். இதனால் கார் நகர முடியாமல் ஊர்ந்து கொண்டு இருந்தது.

பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி
இதை பார்த்ததும் சரண்ஜித் சிங் இண்டர்வியூ எடுத்தவரிடம், அங்கே பாருங்கள்.. மக்கள் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். இதேதான் பிரதமர் மோடி சென்ற போதும் நடந்திருக்கும். இதில் உயிருக்கு என்ன ஆபத்து இருக்க முடியும்? உயிருக்கு எந்த ஆபத்தும் கிடையாது. போராட்டக்காரர்களிடம் பிரதமர் மோடி நினைத்து இருந்தால் பேசி இருக்கலாம்.

பிரதமர் பஞ்சாப்
நானும் நம்முடைய பிரதமரை மதிக்கிறேன். அவர் ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அவரின் உடல் நலத்திற்காக நானும் கடவுளிடம் வேண்டுகிறேன். போராட்டம் செய்வது என்பது மக்களின் உரிமை. அதை தவறு என்று சொல்ல முடியாது. பஞ்சாப்பில் தேர்தல் நடக்கிறது. இன்னும் 2-3 நாட்களில் தேர்தல் கட்டுப்பாட்டு விதிகள் அமலுக்கு வந்துவிடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும், என்று சரண்ஜித் சிங் குறிப்பிட்டார்.

சரண்ஜித் சிங் கார்
ஆனால் தொடர்ந்து போராட்டக்காரர்கள் முதல்வர் காரை நகர முடியாமல் தடுத்துக்கொண்டே இருந்தனர். இதனால் கார் செல்வதில் பிரச்சனை ஏற்பட்டது. உடனே முதல்வர் சரண்ஜித் சிங், காரை நிறுத்து என்று டிரைவரிடம் கூறினார். காரை நிறுத்து நானே நேராக சென்று அவர்களிடம் பேசிவிட்டு வருகிறேன் என்று டிரைவரிடமும், அருகே இருந்த செய்தியாளர்களிடமும் தெரிவித்தார். கார் நிறுத்தப்பட்டது.

பாஜக மோடி பஞ்சாப்
இதையடுத்து காரில் இருந்து இறங்கி போராட்டக்காரர்களிடம் சென்ற முதல்வர் சரண்ஜித் சிங், அங்கே இருந்தவர்களிடம் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்டார். ஒரு சிலர் பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு வழங்கவில்லை என்றனர். சில போராட்டக்காரர்கள் வேறு சில கோரிக்கைகளை வைத்தனர். இதையடுத்து அவர்களிடம் பேசிய சரண்ஜித் சிங், உங்கள் கோரிக்கைகளை செவி மடுக்கிறேன். இப்போது அவசரமாக செல்கிறேன்.

சரண்ஜித் சிங் செய்த காரியம்
11 மணிக்கு முதல்வர் அலுவலகம் வாருங்கள். பேசலாம். அங்கே உங்கள் குறைகளை நேரில் கேட்கிறேன் என்று கூறினார். இதை ஏற்றுக்கொண்ட போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து மீண்டும் காருக்கு வந்த முதல்வர் சரண்ஜித் சிங், பாருங்கள் என்னுடைய காரை போராட்டக்காரர்கள் நிறுத்தினார்கள். நான் என்னுடைய காரை நிறுத்தி, அவர்களிடம் நேரில் சென்று பேசினேன்.

பஞ்சாப் பிரதமர்
எனக்கு ஏதாவது ஆகிவிட்டதா? பிரச்னையை இப்படித்தான் சரி செய்ய வேண்டும். பிரதமர் மோடிக்கு அன்று எந்த விதமான ஆபத்தும் இல்லை. அது ஒரு ஜனநாயக ரீதியாக போராட்டம். அந்த போராட்டம் மிகவும் அமைதியான முறையில் நடந்தது. பிரதமரை தாக்க யாரும் முயலவில்லை. இதை பாஜக வேண்டும் என்றே பெரிதாக்க முயன்று கொண்டு இருக்கிறது, என்று முதல்வர் சரண்ஜித் சிங் விளக்கம் அளித்தார்.












Click it and Unblock the Notifications