பாகிஸ்தானுக்கு அடுத்த ‛வார்னிங்’.. திடீரென ரபேலில் பறந்த ஜனாதிபதி திரெளபதி முர்மு.. பின்னணி
சண்டிகர்: ஹரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள விமானப்படை தளத்துக்கு இன்று சென்ற ஜனாதிபதி திரெளபதி முர்மு ரஃபேல் போர் விமானத்தில் பறந்தார். இந்நிலையில் தான் அதன் பின்னணி குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜனாதிபதி திரெளபதி முர்மு இன்று ஹரியானா மாநிலம் அம்பாலா விமானப்படை தளத்துக்கு சென்றார். அங்கு அவருக்கு விமானப்படை வீரர்கள் சார்பில் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
அதன்பிறகு அவர் ரஃபேல் போர் விமானத்தில் பறந்தார். இதன்மூலம் ரஃபேல் போர் விமானத்தில் பறந்த முதல் இந்திய பெண் ஜனாதிபதி என்ற பெருமையை பெற்றார்.

இந்த ரஃபேல் போர் விமானம் பிரான்ஸ் நாட்டின் தயாரிப்பாகும். பிரான்ஸ் நாட்டின் தசால்ட் அவியேஷன் என்ற நிறுவனம் தான் இந்த போர் விமானங்களை தயாரித்து வருகிறது. இந்த போர் விமானங்கள் 4.5 தலைமுறையை சேர்ந்தவையாகும். கடந்த 2020ம் ஆண்டில் முதல் முதலாக இந்த போர் விமானம் நம் விமானப்படையில் சேர்க்கப்பட்டது.
முதல் முறையாக 5 போர் விமானங்கள் இணைக்கப்பட்டன. அதன்பிறகு ‛கோல்டன் ஏரோஸ்' என அழைக்கப்படும் 17 Squadron-ல் இந்த விமானங்கள் இணைக்கப்பட்டது. தற்போது கூடுதல் ரபேல் போர் விமானங்கள் நம்மிடம் உள்ளது. இந்த போர் விமானங்கள் தற்போது நம் நாட்டுக்கு பெரிய அளவில் கைக்கொடுத்து வருகிறது.
சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையில் இந்த போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டது. மே 7 ம் தேதி இந்த போர் விமானங்களை பயன்படுத்தி தான் நம் பாதுகாப்பு துறை பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை அழித்து தரைமட்டமாக்கியது.
இத்தகைய பெருமை கொண்ட ரஃபேல் போர் விமானத்தில் திரெளபதி முர்மு இன்று பயணம் செய்துள்ளார். திரெளபதி முர்முவின் இந்த திடீர் பயணத்தின் முக்கிய விஷயம் உள்ளது. இது பாகிஸ்தானுக்கு இந்தியா கொடுக்கும் எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது. விரைவில் நம் முப்படைகளின் சார்பில் ‛திரிசூல்' பயிற்சி பாகிஸ்தான் எல்லையில் நடைபெற உள்ளது.
இதற்கு முப்படைகளும் தயாராகி வருகின்றன. அந்த வகையில் இந்தியாவின் விமானப்படை எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ள தயாராக உள்ளது என்பதை பாகிஸ்தானுக்கு எடுத்து காட்டும் வகையில் ஜனாதிபதி திரெளபதி முர்மு இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு முன்பு கடந்த 2023ம் ஆண்டில் அசாம் மாநிலம் தெஸ்பூர் விமானப்படை தளத்துக்கு சென்ற திரெளபதி முர்மு சுகோய் -30 எம்கேஐ ர போர் விமானத்தில் பயணித்து இருந்தார். இந்த சுகோய் 30 எம்கேஐ ரக போர் விமானத்தில் இதற்கு முன்பு கடந்த 2006ம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாம் பயணம் செய்திருந்தார்.
அதன்பிறகு 2009 ம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் பயணம் செய்திருந்தார். அதன்பிறகு 3வது ஜனாதிபதியாகவும், 2வது பெண் ஜனாதிபதியாகவும் திரெளபதி முர்மு இந்த பயணத்தை மேற்கொண்டிருந்தார்.












Click it and Unblock the Notifications