பாஜக அரசின் அடக்குமுறைகளுக்கு பதிலடியாக ஹரியானா தேர்தலில் 'வெச்சு செய்வோம்'.. மிரட்டும் விவசாயிகள்!
சண்டிகர்: ஹரியானா மாநில சட்டசபை தேர்தலில் தங்களது போராட்டத்தை ஒடுக்கிய பாஜகவுக்கு தக்க பாடம் புகட்டுவோம்; ஒவ்வொரு கிராமமாக சென்று பாஜக அரசின் பொய்யான வாக்குறுதிகளை அம்பலபடுத்துவோம்; பிப்ரவரி மாதம் முதல் பஞ்சாப்- ஹரியானா எல்லையான ஷம்பு பகுதியில் நடத்தப்பட்டு வரும் போராட்டத்தின் நோக்கங்களை பொதுமக்களிடம் பிரசாரம் செய்வோம் என விவசாயிகள் சங்கங்கள் அறிவித்திருப்பது ஆளும் பாஜகவை கதிகலங்க வைத்திருக்கிறது.
ஹரியானா லோக்சபா தேர்தலில் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்தது. மொத்தம் உள்ள 10 தொகுதிகளில் 5-ல் பாஜக வென்றது. இதற்கு பிரதான காரணமாக சொல்லப்பட்டது மத்திய பாஜக அரசுக்கு எதிரான விவசாயிகளின் டெல்லி போராட்டம்தான்.

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த டெல்லி எல்லைகளில் விவசாயிகள் நடத்திய ஓராண்டுப் போராட்டத்தில் ஹரியானா விவசாயிகளின் பங்களிப்பு அதிகம். இந்த போராட்டத்தால்தான் பிரதமர் மோடி, தாம் கொண்டு வந்த வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்று மன்னிப்பு கோரினார். ஆனால் அப்போது விவசாயிகளுக்கு தரப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற எந்த ஒரு நடவடிக்கையுமே பாஜக அரசு மேற்கொள்ளவில்லை என்பதால் இப்போதும் பஞ்சாப்- ஹரியானா எல்லையில் விவசாயிகள் போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் 90 தொகுதிகளைக் கொண்ட ஹரியானா சட்டசபைக்கு அக்டோபர் 1-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 4-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
ஹரியானாவில் ஆளும் பாஜகவுக்கு எதிராக அதிருப்தி அலை வீசுகிறது. காங்கிரஸ் கட்சி இதனை அறுவடை செய்ய தீவிரம் காட்டுகிறது. பாஜகவுக்கு எதிரான வாக்குகளை ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிட்டு பங்கு போட இருக்கிறது. இந்திய தேசிய லோக் தளமும் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்துள்ளது. பாஜக கூட்டணியில் இருந்து மார்ச் மாதம்தான் ஜேஜேபி கட்சி விலகியது.
இந்த நிலையில் ஹரியானாவில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக பஞ்சாப் -ஹரியானா எல்லையில் போராடும் விவசாயிகள் களமிறங்கி உள்ளனர். தங்களது போராட்டத்தை எப்படியெல்லாம் பாஜக அரசு ஒடுக்கியது என்பது தொடர்பாக கண்காட்சிகளை மகா பஞ்சாயத்துகள் மூலமாக கிராமம் கிராமாக எடுத்துச் சொல்வோம்; மத்தியில் ஆளும் பாஜக அரசு எப்படி விவசாயிகளை பொய்யான வாக்குறுதிகளால் ஏமாற்றியது என்பதையும் மக்களிடம் எடுத்துச் சொல்வோம். அதே நேரத்தில் எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவாக பிரசாரம் செய்ய மாட்டோம். பாஜகவை எதிர்க்கக் கூடிய வலிமையான வெல்லும் வாய்ப்புள்ள வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என்று மட்டும் பிரசாரம் செய்வோம் என விவசாயிகள் அறிவித்துள்ளனர். இதனால் ஹரியானாவில் ஆளும் பாஜக கதிகலங்கி இருக்கிறது.












Click it and Unblock the Notifications