பெண்களுக்கு மாதந்தோறும் ரூ1,000 .. பஞ்சாப்பில் தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த அரவிந்த் கெஜ்ரிவால்
சண்டிகர்: பஞ்சாப்பில் ஆத் ஆத்மி ஆட்சி அமைத்தால் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ1,000 உதவி தொகை வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. பஞ்சாப்பில் தற்போது ஆளும் கட்சியாக காங்கிரஸ் இருந்து வருகிறது.
பஞ்சாப் தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகளில் பெரும்பாலானவை காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்க முடியாது என்கின்றன. அதேநேரத்தில் தொங்கு சட்டசபை அமையலாம்; ஆம் ஆத்மி கட்சிக்கு கணிசமான இடங்கள் கிடைக்கலாம் எனவும் கூறுகின்றன.

பெண்களின் பங்களிப்பு
இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று கூறியதாவது: மத்திய அரசின் 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக ஓராண்டு காலம் விவசாயிகள் போராட்டம் நடத்தி உள்ளனர். இப்போது மத்திய அரசு விவசாய சட்டங்களை வாபஸ் பெற்றுள்ளது. விவசாயிகளின் போராட்டம் வெற்றி பெறுவதற்கு பெண்களின் பங்களிப்புதான் மிக முக்கிய காரணம்.

பெண்களுக்கு மாதம் ரூ1,000
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தால் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் மாதந்தோறும் ரூ1,000 நிதி உதவி வழங்கப்படும். உலகத்திலேயே பெண்களுக்கு இப்படியான நலத் திட்ட உதவி முதன் முதலாக அறிவிக்கப்படுகிறது. ஆம் ஆத்மி கட்சிக்கு பெண்கள் ஆதரவளிக்கு ஆட்சியில் அமர்த்தினால் நிச்சயம் இதனை நிறைவேற்றுவோம்.

நிதி சுமையே அல்ல
எந்த ஒரு அரசுக்கும் நிதி சுமை ஒரு சுமை அல்ல. மாஃபியாக்களுக்கு போகிற பணத்தை முடக்கினாலே அரசுக்கு வருவாய் வந்துவிடும். பஞ்சாப் மாநிலம் சரியான வளர்ச்சி பாதையில் செல்ல வேண்டும் எனில் சட்டசபை தேர்தலில் எந்த ஆட்சி அமைய வேண்டும் என்பதை பெண்கள்தான் தீர்மானிக்க வேண்டும். ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைப்பதற்கு பஞ்சாப் பெண் வாக்காளர்கள் ஒருமுறை வாய்ப்பு வழங்க வேண்டும்.

பஞ்சாப் மின் கட்டணம்
பஞ்சாப் மாநிலத்தில் மின் கட்டணம் இன்னமும் குறைக்கப்படவில்லை. பஞ்சாப் மக்கள் அதிக அளவு மின் கட்டணம் செலுத்துகின்றனர். ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தால் மின் கட்டணத்தை வெகுவாக குறைத்து காட்டுவோம். இவ்வாறு அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications