பஞ்சாப் பாஜக வேட்பாளருக்கு அடி, உதை! பிரசாரம் செய்ய சென்ற இடத்தில் திடீர் தாக்குதல்.. பரபரப்பு!
சண்டிகர்: பஞ்சாபில் வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அங்குப் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தாக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் வரும் பிப்.20ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள 5 மாநிலங்களில் பஞ்சாபில் மட்டுமே காங்கிரஸ் கட்சி ஆளும் கட்சியாக உள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் 117 இடங்கள் உள்ள நிலையில், அதில் ஆட்சியைப் பிடிக்க ஒரு கட்சி குறைந்தது 59 இடங்களில் வெல்ல வேண்டும். வரும் மார்ச் 10இல் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

பஞ்சாப் தேர்தல்
பஞ்சாப் மாநிலத்தைப் பொருத்தவரை அங்கு 4 முனை போட்டி நிலவுகிறது. இருப்பினும், அங்கு ஆளும் கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சிக்கும் , ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. அதேபோல அகாலி தளம் கட்சியும் சிறு கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுகிறது. இவை தவிரப் பஞ்சாபில் முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அமரிந்தர் சிங்கின் லோக் காங்கிரஸ் பாஜக உடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்கிறது. அங்குக் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது.

தாக்குதல்
பஞ்சாபில் வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தைத் தீவிரமாக முன்னெடுத்துள்ளன. அதன்படி கில் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பஞ்சாப் பாஜக வேட்பாளர் எஸ்ஆர் லாதர் லூதியானாவில் நேற்று மாலை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது பஞ்சாப் பாஜக வேட்பாளரின் காரை சில அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் காயமடைந்த எஸ்ஆர் லாதர் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

யார் இந்த எஸ்ஆர் லாதர்
இது குறித்து பஞ்சாப் போலீசார் கூறுகையில், "பிரசாரத்தின் போது அடையாளம் தெரியாத நபர்களால் அவர் தாக்கப்பட்டார். பாஜக வேட்பாளருக்கு ஏற்பட்ட காயங்கள் அல்லது இதற்கான நோக்கம் தெளிவாக இல்லை" என்றார். தாக்குதலுக்கு உள்ளான எஸ்ஆர் லாதர், 1991 பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவர். இவர் தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல்முறையாகும். எஸ்ஆர் லாதர் 1992-பேட்ச் பஞ்சாப் சிவில் சர்வீஸ் அதிகாரியான குல்தீப் சிங் வைத் என்பவருக்கு எதிராக கில் தொகுதியில் போட்டியிடுகிறார்.

பஞ்சாப் தேர்தல் களம்
மத்திய அரசின் விவசாய சட்டங்கள் காரணமாகப் பஞ்சாபில் மக்கள் பாஜக மீது அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது. மத்திய அரசு விவசாய சட்டங்களை இப்போது வாபஸ் பெற்றுவிட்ட போதிலும், சுமார் ஓர் ஆண்டாகத் தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை மத்திய பாஜக அரசு கையாண்ட விதம் விவசாயிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. விவசாயிகள் சட்டத்தால் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications