தேர்தல் தோல்வி எதிரொலி! - பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார் சித்து!
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து ராஜினாமா கடிதத்தை சோனியா காந்திக்கு அனுப்பினார் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து.
உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியும் மற்ற நான்கு மாநிலத்தில் பாஜகவும் வெற்றி பெற்றுள்ளது.
இந்த ஐந்து மாநிலத்திலும், காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி, ஆட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்டுள்ளது.

சோனியா காந்தி
உட்கட்சி பிரச்சனை, சரியான பிரசாரம் இல்லாதது, தலைமை குறித்த கருத்துகளால் காங்கிரஸ் கட்சி தோல்விக்குப் பிறகான கருத்துகளால் துயரத்தில் இருந்தது. இந்நிலையில், காங்கிரஸின் இந்த வீழ்ச்சி குறித்து அரசியல் வட்டாரத்தில் விவாதிக்கப்பட்டு வரும் வேளையில், தற்போது அந்தக் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி 5 மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்களை ராஜினாமா செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

ராஜினாமா
காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் தேர்தல் நடந்த மாநிலத்தின் தலைவர்களை ராஜினாமா செய்ய சொல்லியுள்ளார் சோனியா காந்தி. அதன்படி, உத்தரப்பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் குமார் லல்லு, பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, உத்தரகாண்ட் காங்கிரஸ் தலைவர் கணேஷ் கொடியால், கோவா காங்கிரஸ் தலைவர் கிரிஷ் சோடங்கர், மணிப்பூர் காங்கிரஸ் தலைவர் நமெய்ரக்பம் லோகேன் சிங் ஆகியோரை நீக்குவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

நவ்ஜோத் சிங் சித்து
இதையடுத்து பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து இன்று தன்னுடைய ராஜினாமா கடிதத்தை சோனியா காந்திக்கு அனுப்பி வைத்துள்ளார். கிரிக்கெட்டராக வாழ்க்கையை தொடங்கி, பாஜகவில் தன்னுடைய அரசியல் வாழ்க்கையை தொடர்ந்தார். அதனையடுத்து காங்கிரஸில் இணைந்தார். ராகுல் காந்தியுடனான நட்பு அவரை, மாநில தலைவராக கொண்டு வந்தது. 2017 தேர்தலில் காங்கிரஸ் வென்று பஞ்சாபில் ஆட்சியைப் பிடித்தது. அதன்பிறகு சித்துவுக்கும் முதல்வர் அமரீந்தர் சிங்குக்கும் ஏற்பட்ட பிரச்சனையால், முதல்வர் பதவியில் இருந்து அமரீந்தர் நீக்கப்பட்டார்.

தேர்தல் தோல்வி
அதன்பிறகு முதல்வராக சித்து வருவார் என்று நினைத்தபோது, சரண்ஜித் சிங் சன்னி நியமிக்கப்பட்டார். இந்த தேர்தலில் சரண்ஜித்தே முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட, தேர்தல் வேலைகளில் சித்து சுனக்கம் காட்டியதாக அவர்மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி பிரசாரத்தில் எதிரொலித்தது. விளைவு, காங்கிரஸ் தோற்றது. முதல்வர் வேட்பாளரான சரண்ஜித் சிங் தோற்றார். பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த சித்துவும் தோற்றுப்போனார். தற்போது சோனியா அறிவுத்தலின்பேரில் தலைவர் பதவியை சித்து ராஜினாமா செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications