ஆம் ஆத்மி அலையிலும்.. பாஜகவிற்கு முதல் வெற்றி.. பஞ்சாப் தலைவர் அஸ்வனி குமார் எம்எல்ஏவானார்
சண்டிகர்: பஞ்சாப் தேர்தலில் பதான்கோட் பகுதியில் பஞ்சாப் மாநில பாஜக தலைவர் அஸ்வனி குமார் ஷர்மா வெற்றி அடைந்துள்ளார்.
பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் மொத்தம் 117 தொகுதிகளுக்கு ஒரேகட்டமாக தேர்தல் நடந்தது. விவசாயிகளின் போராட்டத்துக்குப் பிறகு நடக்கும் பஞ்சாப் தேர்தலை இந்தியா உற்றுநோக்கி வருகிறது.
பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் தேர்தல் நடந்தது. இந்த ஐந்து மாநிலங்களுக்கும் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன.
பஞ்சாப்
பஞ்சாப் மாநிலத்தைப் பொருத்தவரை, விவசாயிகள் போராட்டம் மிகப்பெரிய விஷயமாக கருதப்பட்டது. டெல்லியில் விவசாயிகள் போராடும் போது, பாஜக எந்த உதவியும் செய்யவில்லை, அதோடு, விவசாயிகள் இறந்தபோது அதற்கு பிரதமர் வருத்தம் தெரிவிக்கவில்லை என்பதால் பஞ்சாப் விவசாயிகள் பாஜக மீது அதிருப்தியில் இருந்தனர்.
பாஜக
இந்நிலையில் தான் பஞ்சாப் தேர்தலை எதிர்கொண்டது பாஜக. இந்த தேர்தலில் பாஜகவுக்கு பெரிய எதிர்பார்ப்பு இல்லை. கடந்த தேர்தலில் பாஜக, அகாலிதளத்துடன் கூட்டணி வைத்து பாஜக மூன்று இடங்களைக் கைப்பற்றியது. இந்த தேர்தலில் அகாலிதளம் தனித்து களம் இறங்குகிறது.
அஸ்வனி குமார்
இன்று பஞ்சாப் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் 117 தொகுதியில் பாஜக இரண்டு இடத்தில் முன்னிலை வகித்து வருகிறது. இந்தத் தேர்தலில் பாஜக மாநில தலைவர் அஸ்வனி குமார் ஷர்மா, பதான்கோட் தொகுதியில் போட்டியிட்டார். அவரது வெற்றி தற்போது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பாஜக சார்பாக முதல் வெற்றியை அஸ்வனி குமார் பதிவு செய்துள்ளார்.
ஆம் ஆத்மி
ஆம் ஆத்மி கட்சி இந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது ஆம் ஆத்மி. பஞ்சாபில் உள்ள 117 இடங்களில் ஆம் ஆத்மி 90 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. காங்கிரஸ் வெறும் 18 இடங்களில் தான் முன்னிலையில் இருக்கிறது. ஆம் ஆத்மி கட்சியிடம் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்திருக்கிறது.