ஒப்பந்த செவிலியர்கள் கோரிக்கை ஏற்பு.. முதல் கட்டமாக 1,000 பேர் பணி நிரந்தரம்.. அமைச்சர் மா.சு
சென்னை: முதல்கட்டமாக 1,000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அரசின் முடிவினை ஏற்று ஒப்பந்த செவிலியர்கள் போராட்டத்தை முடித்துக்கொண்டனர் என்றும், படிப்படியாக மீதமுள்ள ஒப்பந்த செவிலியர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று அவர் கூறினார்.
அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் ஒப்பந்த செவிலியர்கள் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பணி நிரந்தரம் செய்ய வேண்டும், வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் கடந்த 18 ஆம் தேதி போராட்டத்தை தொடங்கினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அதில் சுமூக தீர்வு காணப்படவில்லை. பின்னர் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சில கோரிக்கைகளை ஏற்று அறிவிப்பினை வெளியிட்டார். அதனையும் அவர்கள் ஏற்கவில்லை. இதனால் சென்னையில் இருந்து அவர்களை போலீசார் வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து கிளாம்பாக்கம் பஸ் நிலையம், கூடுவாஞ்சேரி நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் செவிலியர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். நேற்று நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 500-க்கும் மேற்பட்ட நர்சுகள் போராட்டத்தை தொடர்ந்த நிலையில் அவர்களை போலீசார் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.
10 அரசு பஸ்களில் ஏற்றப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். திருச்சி, மதுரைக்கு அழைத்து செல்லப்பட்ட போது அவர்கள் வழியிலேயே சிலர் இறங்கினார்கள். இதைதொடர்ந்து இன்று சேலம், கள்ளக்குறிச்சி, திருச்சி, பெரம்பலூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நர்சுகள் போராட்டம் நடத்தினர்.
கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றும் இன்றும் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அமைச்சர் மா சுப்பிரமணியன் முதல் கட்டமாக 1000 செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.
அப்போது பேசிய அவர், அரசின் முடிவினை ஏற்று ஒப்பந்த செவிலியர்கள் போராட்டத்தை முடித்துக்கொண்டனர் என்றும், படிப்படியாக மீதமுள்ள ஒப்பந்த செவிலியர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications