புதிய வகை கொரோனா வைரஸ் சந்தேகம்.. தமிழகத்தில் 1088 பேர் தீவிர கண்காணிப்பு.. விஜயபாஸ்கர் தகவல்
சென்னை: லண்டனில் இருந்து கடந்த 10 தினங்களாக தமிழகத்திற்கு வந்த 1,088 பேர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர், அதில் ஒருவருக்கு புதுவகையான வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ராஜகிரி உள்ளிட்ட பகுதிகளில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சொந்த செலவில் கண் சிகிச்சை முகாமை நடத்தி வருகிறார்.
முகாமை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு இலவசமாக கண் பரிசோதனை செய்யப்பட்டு அவர்களுக்கு இலவசமாகவே கண்ணாடிகளும் கண் அறுவை சிகிச்சையும் வழங்கப்படுகிறது.

புனேவுக்கு மரபணு
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், இங்கிலாந்து நாட்டில் இருந்து தமிழகத்திற்கு விமானம் மூலமாக வந்தவர்களை பரிசோதனை செய்ததில் அதில் ஒருவருக்கு கொரோனா பாசிட்டிவ் வந்துள்ளது. அந்த வைரசை மரபணு பரிசோதனைக்கு புனேவுக்கு அனுப்பிவைத்துள்ளோம்.
அதன் முடிவுகள் வந்தால்தான் அது என்ன மாதிரியான வைரஸ் என்பது தெரியவரும். அந்த நபர் அரசின் தீவிர கண்காணிப்புப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளார்.

பீதி தேவையில்லை
புதுவகையான வைரஸ் குறித்து பொதுமக்கள், அச்சமும் பீதியும் அடைய வேண்டிய அவசியமில்லை. லண்டனில் இருந்து கடந்த 10 தினங்களாக தமிழகத்திற்கு வந்த 1,088 பேர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும், தீவிரமாக கண்காணிக்கப்பட்டு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

விமான நிலையங்கள்
தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் சுகாதாரத்துறை சார்பில் சோதனைகள் பலப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று அண்டை மாநிலங்களில் இருந்து வருபவர்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கையால் கொரானா நோய் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை
புதுவகையான வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை தமிழக அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
மத்திய மாநில அரசுகள் ஏற்கனவே முதலில் இருந்து வரும் விமானங்களை ரத்து செய்துள்ளது. இவ்வாறு, விஜயபாஸ்கர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications