சென்னை ஆட்டோ டிரைவர் மாஸ்.. நேரா கொண்டு போலீஸ் ஸ்டேஷன் வாசலில் வண்டியை விட்டு.. சிக்கிய கொள்ளையர்கள்
சென்னை: யானைக்கவுனி அருகே ஆட்டோவில் கொண்டு வரப்பட்ட ரூ.2 கோடி ஹவாலா பணத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்யப்பட்டது. ஆட்டோ டிரைவரின் சாமர்த்தியத்தால் ஹவாலா பணம் சிக்கியது. ஆந்திராவில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்த பணம் யாருடையது என்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை பெரம்பூரைச் சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவர், ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இவர், மாதவரம் பேருந்து நிலையம் அருகே இருந்து 3 பேரை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு சவாரி சென்றார். யானைக்கவுனி வால்டாக்ஸ் சாலையில் உள்ள ஓட்டல் அருகே சென்ற போது, ஆட்டோவில் பயணம் செய்தவர்கள் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் பேசினர். இதனால், அவர்கள் மீது ஆட்டோ ஓட்டுநர் சுந்தர்ராஜுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

மேலும், 3 பேரும் ஏதேனும் குற்ற சம்பவத்தில் தொடர்புடையவர்களாக இருப்பார்களோ எனவும் கேள்வி எழுந்தது. பின்னர், சாமர்த்தியமாக செயல்பட்ட ஓட்டுநர், யானைக்கவுனி காவல் நிலையம் அருகே ஆட்டோவை நிறுத்தினார். பின்னர், சற்று நேரத்தில் வருவதாக கூறிவிட்டு நேராக யானைக்கவுனி காவல் நிலையத்திற்கு சென்ற அவர்,அங்கிருந்த காவல்துறையினரிடம் தகவலை தெரிவித்தார்.
ஆட்டோவில் இருந்தவர்கள் தப்ப முயன்ற போது காவல்துறையினர் 3 பேரையும் பிடித்து காவல்நிலையத்திற்குள் கொண்டு போய் விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் வைத்திருந்த பையில் சுமார் ரூ.2 கோடி பணத்தை 4 பண்டல்களாக மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. மேலும், பணத்திற்கான உரிய ஆவணம் இல்லாததால் அதை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து 3 பேரை கைது செய்த காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர். அதில், கைது செய்யப்பட்ட 3 பேரும் ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த யாசின், தாவூத் மற்றும் பைசுல்லா என்பது தெரிந்தது. நெல்லூரில் இருந்து கார் மூலம் இந்த பணம் மாதவரத்திற்கு வந்துள்ளது. இதன் பின்னணியில் யார் யார் உள்ளனர் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாமர்த்தியமாக செயல்பட்ட ஆட்டோ டிரைவரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications