மொத்தமாக மாறுது சென்னை மெரினா! ஜொலிக்கும் கார்டன்கள், நீர் வீழ்ச்சிகள்.. சிஎம்டிஏவின் மாஸ் பிளான்
சென்னை: சென்னை சாந்தோமில் இருந்து நேப்பியர் பாலம் வரையிலான 4 கிலோ மீட்டர் மெரினா நடைபாதையில் ஒரு பெரிய மேக் ஓவர் அமைக்க சிஎம்டிஏ முடிவு செய்துள்ளது. இதில் ஒளியேற்றப்பட்ட பாரம்பரிய கட்டமைப்புகள், கார்டன்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட இருக்கின்றன.
சென்னை என்றாலே பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது மெரினா கடற்கரைதான். ஆசியாவிலேயே இரண்டாவது நீளமான கடற்கரையான மெரினா, சென்னைவாசிகளின் மிகச்சிறந்த சுற்றுலா தலம் என்று சொன்னால் மிகையல்ல. காற்று புகக் கூட இடம் இல்லாத அளவுக்கு நெருக்கமாக அமைந்திருக்கும் கான்கீரிட் கட்டிடங்களுக்குள் வசிக்கும் சென்னை மக்கள் இளைப்பாற அவ்வப்போது சென்னை மெரினா கடற்கரைக்கு படையெடுப்பதை காண முடியும்.

கடலின் அழகை குடும்பத்துடன் சென்று ரசித்து விட்டு அங்குள்ள கடைகளில் விருப்பப்பட்டதை வாங்கி சாப்பிட்டுவிட்டு வருவதை காண முடியும்.. அதேபோல, வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வருபவர்கள், தங்கள் பயண லிஸ்டில் கண்டிப்பாக மெரினா கடற்கரையை வைத்து இருப்பார்கள். இதனால், வார நாட்களிலும் மாலை வேளைகளில் பயணிகள் கூட்டம் அலைமோதும்.
சென்னை மக்கள் மனதில் நெருக்கமான இடத்தை பிடித்துள்ள சென்னை மெரினா கடற்கரையை அழகுபடுத்த சென்னை மாநகராட்சி பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தான் தற்போது மெரினா கடற்கரையில் புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதன்படி, ரூ. 10 கோடி செலவில் மெரினாவில் புதிய பாரம்பரிய மற்றும் செயல்பாட்டு மையம் அமைக்கப்பட இருக்கிறது.
அதேபோல, சாந்தோம் தேவாலயத்தில் இருந்து நேப்பியர் பாலம் வரையிலான 4 கி.மீட்டர் மெரினா நடைபாதையில் பெரிய மேக் ஓவர் அமைக்கப்பட உள்ளது. இந்த மேக் ஓவரில் ஒளியேற்றப்பட்ட பாரம்பரிய கட்டமைப்புகள், தோட்டங்கள் மற்றும் மேம்படுத்தப்பட நடைபாதை ஆகியவை அமைக்கப்பட உள்ளன. நகர்புற சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
அதேபோல, நடைபாதையில் அமைக்கப்பட்டுள்ள தூண்களில் பல வண்ணங்களில் டிசைன்கள் அமைப்பது, பெரிய அளவிலான டிஜிட்டல் போர்டுகள்.. நடந்து வரும் சுற்றுலாப் பயணிகள் சாலையை சிரமம் இன்றி கடக்கும் வகையில் சுரங்கப்பாதைகளை மேம்படுத்துவது போன்ற பணிகளும் செய்யப்பட உள்ளன.
இதுமட்டும் இன்றி கடலின் அழகை அமர்ந்து ரசிக்கும் விதமாக இருக்கை வசதிகள், போதுமான விளக்குகள், தெளிவான வழிகாட்டி பலகைகள், மின்னொளியில் ஜொலிக்கும் தோட்டங்கள், செயற்கை நீர் வீழ்ச்சிகள், கலை சிற்பங்களுடன் கூடிய தோட்டங்கள் ஆகியவற்றையும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் சென்னை சாந்தோம் முதல் நேப்பியர் வரையிலான இடங்கள் புதிய இடங்கள் போல மாறிவிடும் என்று சிஎம்டிஏ அதிகாரிகள் கூறினர்.












Click it and Unblock the Notifications