கூலிப்படைக்கு 10 கோடி! ஆம்ஸ்ட்ராங் தலைக்கு 100 கோடி! பீதியை கிளப்பும் ரவுடிகள் சாம்ராஜ்ஜியம்!
சென்னை: ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்துவிட்டு சரண்டர் அடைந்துள்ள கூலிப்படைக்கு மட்டும் ரூ.10 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும், அதன் மூளையாகச் செயல்பட்ட ரவுடிகளுக்கு கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் வழங்கப்பட்டிருக்கலாம் என்றும் கிரைம் ரிப்போர்ட்டர் நக்கீரன் பிரகாஷ் கூறியுள்ளார்.
கடந்த 5ஆம் தேதி பெரம்பூர் வேணுகோபால் சுவாமி கோயில் தெருவில் உள்ள வீட்டில் ஆம்ஸ்ட்ராங் இருந்தபோது உணவு டெலிவரி செய்ய வருவதைப் போன்ற உடையில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டிக் கொன்றது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இச்சம்பவம் தொடர்பாகப் பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உட்பட 8 பேர் அன்று இரவே கைது செய்யப்பட்டனர்.

காவல்துறையினர் தொடர்ந்து நடத்திய விசாரணையில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஆக மொத்தம் இந்தக் கொலை தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டு, பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டனர். கைதான இந்த 15 பேரையும் 5 நாட்கள் போலீஸ் கஸ்டடி எடுத்து விசாரிக்கக் கடந்த வாரம் எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த விசாரணையில் இக்கொலை சம்பவத்தின் மூளையாகச் செயல்பட்டவர் என்று போலீஸார் வழக்கறிஞர் அருள் என்பவரைக் கைது செய்தனர். அவரை கொலை நடந்தது எப்படி என்பதற்கான சாட்சியம் அளிப்பதற்காக அழைத்துச் சென்றபோது தப்ப முயன்றதாகக் கூறி காவல்துறையினர் அருளை என்கவுண்டர் செய்தனர்.
இப்படி ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக தினமும் புதுப் புது தகவல்கள் காவல்துறையினரின் விசாரணையில் கிடைத்து வருகிறது. இந்நிலையில் இந்தக் கொலைக்குப் பின்புலமாக ஒரு தொழிலதிபர் இருப்பதாக கிரைம் ரிப்போர்ட்டர் நக்கீரன் பிரகாஷ் ஒரு தகவலை கூறியுள்ளார். இந்தக் கொலை சதி பின்புலம் பற்றி ஒரு யூடியூப் தளத்திற்கு இவர் அளித்துள்ள பேட்டியில். "சின்ன வயதிலிருந்தே எனக்கு ஆம்ஸ்ட்ராங்கை தெரியும். அவர் ஒரு நல்ல மனிதர். பலருக்கும் உதவி செய்திருக்கிறார். பலரை வழக்கறிஞர்களாக உருவாக்கி இருக்கிறார். தலித் மக்களுக்காகப் போராடிய ஒரு தலைவர். அதைத்தாண்டி ஆம்ஸ்ட்ராங்கிற்கு இன்னொரு முகம் இருக்கிறது. அந்த நிழல் உலகம் முகத்தால் ஏற்பட்ட பிரச்சினைதான் ஆம்ஸ்ட்ராங் என்ற உண்மை முகத்தை அழித்துவிட்டது. அதில் அவர் கவனமாக இருக்கவில்லை என்றுதான் தெரிகிறது.
குறிப்பாக ஆருத்ரா கோல்டு மோசடியை எடுத்துக் கொள்ளலாம். அதி 5 ஆயிரம் கோடி பொதுமக்களின் பணம் மோசடி செய்யப்படுகிறது. இந்த மோசடியை முன்வைத்து அதன் உரிமையாளர் ராஜசேகரிடம் பலர் பணம் பறிக்க ஆரம்பித்தார்கள். ஹரீஷ் என்பவர்தான் நிறுவனத்தின் டைரக்டராக இருந்தார். அதைப்போன்று ஆர்.கே.சுரேஷ். இவர்களைப் போலவே ஆம்ஸ்ட்ராங்கிற்கும் ஒரு தொடர்பு இருந்தது. காவல்துறை தரப்பில் விசாரிக்கப்பட்ட வரையில் ஆம்ஸ்ட்ராங்கிற்கு சுமார் 10 கோடி ரூபாய் வரை கொடுக்கப்பட்டதாகத் தகவல் கிடைக்கிறது.
இது தொடர்பாக காவல்துறை ஆம்ஸ்ட்ராங்கை விசாரிக்க இருந்தது என்றும் சொல்லப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக வழக்கறிஞர் அலெக்ஸ், ஆற்காடு சுரேஷ், எல்லாம் வருகிறார்கள். இந்த வழக்கில் ஹரீஷ் என்பவரை காவல்துறை கைதே செய்தது. ஆர்.கே.சுரேஷை வெளிநாட்டில் இருந்தே பிடித்து வந்தார்கள். அவருக்குச் சம்மன் வழங்கப்பட்டது.
இந்தப் பிரச்சினையில் ஆருத்ரா கோல்டு உரிமையாளரை ஆம்ஸ்ட்ராங் நேரடியாகவே டீல் செய்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. அந்த விரோதம்தான் கொலைக்கு முக்கிய காரணமாகவும் பின்புலமாகவும் இருந்துள்ளது என்கிறார்கள். இது போல ஆம்ஸ்ட்ராங் ரியல் எஸ்டேட் தொழில்கூட ஈடுபட்டு வந்தார். அவரை இப்போது புதைத்துள்ள ஊரில் இவர் மூலம் பல ஏக்கர் நிலங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அந்த டீலிங்கில் இவருக்குப் பங்கு உண்டு என்று விசாரணையில் தெரிகிறது.
இந்தத் தொழில் போட்டியால் நிறையப் பகை ஆம்ஸ்ட்ராங்கிற்கு இருந்து வந்துள்ளது. அவர் தைரியமானவர். நல்ல தற்காப்புக் கலைகள் தெரிந்தவர். பாக்சர். அவர் ஒரு கைத்துப்பாக்கி கூட பாதுகாப்புக்கு வைத்திருந்தார். அந்தத் தைரியத்தால் அவர் காவல்துறையில் ஒரு பாதுகாப்புக்காக ஒரு துப்பாக்கி ஏந்திய காவலரைக் கேட்டுப் பெறத் தவறிவிட்டார். அதற்குக் காரணம், தன் மேல் இருந்த நம்பிக்கை.
இவரைக் கொலை செய்த ஆற்காடு சுரேஷ் தம்பி பொன்னை பாலு தலைமையில்தான் கொலை நடக்கிறது. இந்தக் கும்பலுக்கு மட்டும் 10 கோடி ரூபாய் பேசப்பட்டதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் 6 பேரைத் தாண்டி மொத்தம் 15 பேர் சரண்டர் ஆகியிருக்கிறார்கள். இதற்குப் பின்னால் வேறு சிலரும் இருக்கிறார்கள்.
குறிப்பாக ஒரு முக்கிய புள்ளி இருக்கிறார். அவர் பெயரை நான் இப்போது சொல்ல முடியாது. மேலும் திண்டுக்கல் மோகன் ராம் என்ற ரவுடியின் கைவரிசையும் உள்ளது. இவன் தமிழ்நாட்டில் மிகப்பெரிய ரவுடி. இதுவரை சிக்கியதே இல்லை. தலைமறைவுதான். இவரது சிஷ்யன்தான் சீர்காழி சத்யா. அவரை காவல்துறை இப்போது பிடித்துள்ளது. அவனிடம் இருந்து வெளிநாட்டுத் துப்பாக்கி கைப்பற்றப் பட்டுள்ளது. இவர்கள் பின்னணியில் மிகப்பெரிய பணக்காரர் ரவுடி ஒருவர் உள்ளார். அவருக்கும் தொடர்பு இருக்கிறது. ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ஸ்கெட்ச் போட்டவர் நெட்டூர் கண்ணன் தான். இவன் ஒரு வாடகை கொலையாளி. இவர் கூடவே பாயசம் பரமசிவம், சீசிங் ராஜா, சைதை சுகு, நாகேந்திரன் எனப் பலர் உள்ளனர். ஆகவே, இது திட்டமிட்ட படுகொலை. சரண்டர் ஆன கும்பலுக்கே 10 கோடி என்றால், இதன் மூளையாக இருந்த ரவுடிகளுக்கு எத்தனை கோடி வழங்கப்பட்டிருக்கும் என்பதை யோசிக்க வேண்டும்?” என்கிறார்.












Click it and Unblock the Notifications