திமுக அரசுக்கு முக்கிய கோரிக்கை.. விக்கிரமராஜா என்ன இப்படி சொல்றாரு? அதிர்ந்த கூட்டணி கட்சிகள்
சென்னை: தமிழகத்தில் 12 மணி நேர வேலை நேரத்தை முதல்வர் ஸ்டாலின் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார் என்றும் இதனை உடனடியாக சீரமைத்து அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் முதலமைச்சரை கேட்டுக் கொள்வதாக விக்கிரமராஜா கோரிக்கை வைத்துள்ளார்.
12 மணிநேர வேலை அமல்படுத்தப்பட்டால் தமிழகத்தில் தொழில்துறை வளர்ச்சி அடையும் என்றும் எதிர்கட்சிகள் கண்மூடித்தனமாக எதிர்க்க கூடாது. தோழமை கட்சிகளும் சாதக, பாதகங்களை உணர்ந்து அரசுக்கு எடுத்துக்கூறி இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் விக்கிரமராஜா வேண்டுகோளும் வைத்துள்ளார்.

தமிழ்நாடு தொழில் வர்த்தகர் சங்கத்தின் மாநில தலைவர் விக்கிரமராஜா செவ்வாய்கிழமை அனறு திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விக்கிரமராஜா கூறுகையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் 12 மணிநேர வேலை மசோதா அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தால் தமிழகத்தில் தொழில்துறை நல்ல வளர்ச்சி பெறும்.
நமது தமிழகம் ஏற்கனவே அதிகளவு தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறது. இந்த சூழ்நிலையில் தொழிலாளர்கள் கூடுதல் நேரம் பணி செய்தால் அவர்களுக்கான ஊதியமும் அதிகரிக்கும். வேலை வாய்ப்பும் பெருகும். கொரோனா கால கட்டத்தில் வடமாநில தொழிலாளர்கள் இல்லாத சூழ்நிலையில் தமிழகத்தின் நிலையை நினைத்து பார்க்க வேண்டும்.
12 மணி நேர வேலை மசோதாவை எதிர்கட்சிகள் கண்மூடித்தனமாக எதிர்க்க வேண்டாம். தோழமை கட்சிகளும் சாதக, பாதகங்களை உணர்ந்து அரசுக்கு எடுத்துக்கூறி இந்த மசோதாவுக்கு ஆதரவு தர வேண்டும். எந்த நிறுவனமும் தொழிலாளிகள் இல்லாமல் முதலாளிகள் இல்லை. அதேபோல முதலாளிகள் இல்லாமல் தொழிலாளிகளும் இல்லை.

தொழில்துறை வளர்ச்சியை கருத்தில் கொண்டும், இளைஞர்களின் வேலை வாய்ப்பை கருத்தில் கொண்டும் 12 மணிநேர வேலை மசோதவை தொழிற்சங்கங்களும், தோழமை கட்சிகளும் ஆதரவு தர வேண்டும். வரும் மே 5-ந்தேதி ஈரோட்டில் வணிகர் உரிமை முழக்க மாநாடு, வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 40-வது மாநில மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் திண்டுக்கல் மண்டலம் சார்ந்த திண்டுக்கல், பழனி, தேனி, கரூர் ஆகிய 4 மாவட்டங்களில் இருந்து 15 ஆயிரம் வணிகர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும்.
மாநாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் பணிநிறைவு சான்றிதழ்கள் பெற்றால்தான் வணிக கட்டிடங்களுக்கு புதிய மின்இணைப்பு வழங்கப்படும் என்ற மின்சார வாரியத்தின் கொள்கை முடிவை மாற்றி அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. தமிழகத்தில் 12 மணி நேர வேலை நேரத்தை முதல்வர் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறார். இதனை உடனடியாக சீரமைத்து அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறோம்" இவ்வாறு விக்கிரமராஜா கூறினார்.












Click it and Unblock the Notifications