"சல்யூட் பரேட்".. அந்தமானில் இறந்த சிஆர்பிஎஃப் வீரர்.. உருக்கமாக அஞ்சலி செலுத்திய 14 வயது மகள்
சென்னை: அந்தமானில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரரின் உடலுக்கு அவரது மகள் பரேட் சல்யூட் என வணக்கம் செலுத்திய காட்சி காண்போரை கண் கலங்க வைத்தது.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த வளையாம்பட்டை சேர்ந்தவர் செந்தில்குமார் (44). இவர் சிஆர்பிஎஃப் படைப் பிரிவின் தலைமை காவல் அதிகாரியாக இருப்பவர் செந்தில்குமார்.
இவர் அந்தமானில் பணியாற்றி வந்தார். நேற்று மதியம் சக வீரர்களுடன் கடலுக்கு குளிக்கச் சென்றார். அப்போது ராட்சத அலையில் சிக்கி செந்தில்குமார் உயிரிழந்தார்.
14 வயது மகள்
இதைத் தொடர்ந்து அவரது உடல் சென்னை விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரின் உடலுக்கு சிஆர்பிஎஃப் சார்பில் ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. அப்போது செந்தில்குமாரின் உடலுக்கு அவரது 14 வயது மகள் ஸ்ரீதன்யா அஞ்சலி செலுத்தினார்.
வணங்கிய மகள்
தந்தையை இனி எப்போது பார்ப்போம் என்ற ஏக்கத்துடன் கதறி அழுத ஸ்ரீதன்யா, திடீரென உரத்த குரலில் "பரேட் சல்யூட்" என கூறி கைகளை உயர்த்தி சல்யூட் அடித்தார். பின்னர் தந்தையின் உடலின் முன்பு விழுந்து வணங்கினார்.
சொந்த ஊர்
அவரது உடலுக்கு முத்தமிட்டார். இந்த நிகழ்வுகளை கண்ட அங்கிருந்த மக்கள் கண் கலங்கினர். சீருடையில் இருக்கும் போது அழுதல் கூடாது என்ற இராணுவ மரபை தாண்டி, அந்நிகழ்வின் போது உயர் அதிகாரிகளின் கண்களிலும் கண்ணீர் தேக்கத்தை காண முடிந்தது. பின்னர் செந்தில்குமாரின் உடல் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
படித்து சேவை
அவரது இறுதி சடங்குகளை அந்த 14 வயது மகள்தான் செய்தார். அப்போது அவர் கூறுகையில் தனக்கு அம்மாவை காட்டிலும் அப்பாதான் மிகவும் பிடிக்கும். அவர் ஆசைப்படி நானும் நன்கு படித்து பெரிய ஆளாகி ராணுவத்தில் சேவை செய்வேன் என்றார்.