தீபாவளி.. சென்னையில் மட்டும் 148 இடங்களில் தீ விபத்து! தமிழ்நாடு முழுவதும் மோசம்
சென்னை: நேற்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்ட நிலையில், பட்டாசுகள் காரணமாக சென்னையில் மட்டும் 148 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறை தெரிவித்து உள்ளது.
நேற்று தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பட்டாசுகளை வெடித்து மக்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள். காற்று மாசை கட்டுப்படுத்த பட்டாசுகளை வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு நேரக் கட்டுப்பாடு விதித்து இருந்தது. தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கிய தமிழ்நாடு அரசு, காலை 6 மணி முதல் காலை 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் என தெரிவித்து இருந்தது.

இந்த உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்த நேர விதிமுறைகளை கடைபிடிக்காமல், பாதுகாப்பு நெறிமுறைகளை மீறி குடிசைப்பகுதிகள் போன்றவற்றுக்கு அருகே பலர் அதிக நேரம் பட்டாசுகளை வெடித்தனர். இதனால் சென்னையில் காற்று 300 ஐ தாண்டி பதிவானது. விதிகளை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது காவல் துறை வழக்குகளை பதிவு செய்தது. இந்த நிலையில், பல இடங்களில் பட்டாசுகள் வெடித்ததன் காரணமாக தீ விபத்துகள் ஏற்பட்டன.
நேற்று மட்டும் சென்னையில் 148 இடங்களில் பட்டாசுகள் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டு உள்ளதாக தீயணைப்புத் துறை தெரிவித்து உள்ளது. சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள குடோன், பெரியமேடு பகுதியில் உள்ள கடை, கொளத்தூர் குடியிருப்பு பகுதியில் உள்ள வீடு, மயிலாப்பூர் சாய்பாபா கோவில் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டன. இந்த விபத்துகளின் காரணமாக பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும், யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும் தெரிவித்து உள்ள தீயணைப்புத் துறை, விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் தெரிவித்து உள்ளது.

முன்னதாக தமிழ்நாடு காவல் துறை வெளியிட்ட அறிவிப்பில், "எதிர்பாராத விதமாக தீ விபத்து அல்லது பட்டாசுகளினால் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அவசர உதவி எண்.101, காவல்துறை அவசர உதவி எண்.100, அவசர உதவி ஆம்புலன்ஸ்:108, தேசிய உதவி எண்.112, ஆகியவற்றை தொடர்பு கொண்டு உதவி பெறலாம்." என்று குறிப்பிட்டு இருந்தது.












Click it and Unblock the Notifications