சென்னையில் நடுரோட்டில்.. திடீரென 15 அடி ஆழத்திற்கு பள்ளம்! ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய வாகன ஓட்டிகள்!
சென்னை: சென்னையில் கடந்த இரு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், திரு.வி.க நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சாலை ஒன்றில் திடீரென 15 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
76-வது வார்டு பெரம்பூர் பேரக்ஸ் சாலை, அஷ்ட புஜம் சாலை சந்திப்புப் பகுதியில் இன்று மதியம் திடீரென சாலையில் சுமார் 15 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அப்பகுதியில் பள்ளத்தை சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. ஓரிரு நாளில் இந்த பிரச்னை சரி செய்யப்படும் என அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது மெல்ல சென்னை நோக்கி பயணித்தது. தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலு குறைந்துள்ளது. இருப்பினும் மழையின் தீவிரம் இன்னும் முழுமையாக குறையவில்லை. தீபாவளியை ஒட்டி தொடங்கிய மழை, இன்று வரை நீடித்து வருகிறது. எனவே சென்னையின் சில சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியிருந்தது. இப்படி இருக்கையில்தான் சாலையில் பள்ளம் ஏற்பட்டிருக்கிறது.
திருவிக நகர் பகுதியில் மெட்ரோ பணிகள் பெரியதாக எதுவும் நடக்கவில்லை. அப்படி இருக்கையில், இந்த பள்ளம் எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை. சென்னையில் சாலைகளில் பள்ளம் ஏற்படுவது இதுமுதல்முறை கிடையாது. ஏற்கெனவே பல முக்கிய சாலைகளில் இதுபோன்று பள்ளம் ஏற்பட்டிருக்கிறது. எனவே திருவிக நகரில் பள்ளம் ஏற்பட்டதற்கான காரணம் என்பது ஆய்வுக்கு பின்னரே தெரிய வரும்.
பூமிக்கடியிலும் மண்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே அதனால்கூட, இதுபோன்ற பள்ளம் ஏற்பட்டிருக்கலாம். மழை காரணமாக மண்ணின் உறுதி தன்மை கொஞ்சம் தளர்ந்து இருக்கலாம். எனவே மண் சரிவு ஏற்பட்டு பள்ளம் உருவாகியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. நல்வாய்ப்பாக இந்த பள்ளம் காரணமாக இந்த வழியாக வாகனத்தில் சென்றவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications