தேஜஸ் ரயிலை தமிழ்ச்சங்க ரயில் என மாற்றுக.. 15 தமிழக எம்.பி.க்கள் கோரிக்கை..!
சென்னை: சென்னையிலிருந்து நாள்தோறும் மதுரைக்கு இயக்கப்படும் தேஜஸ் விரைவுரயிலின் பெயரை ''தமிழ்ச்சங்கம் விரைவு ரயில்'' என மாற்றக்கோரி தென்னக ரயில்வே மண்டல பொதுமேலாளரிடம் 15 எம்.பி.க்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னை எழும்பூரில் இருந்து காலை 6.05 மணிக்கு புறப்படும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் நண்பகல் 12.20 மணிக்கு மதுரை சென்றடைகிறது. சுமார் 6 மணி நேரத்தில் சென்னையில் இருந்து மதுரை சென்று சேர முடியும் என்பதால் இந்த ரயில் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோல் மறுமார்க்கமாக மாலை 3.00 மணிக்கு மதுரையில் புறப்படும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் இரவு 9.30க்கு சென்னை வந்தடைகிறது.

தென்மாவட்ட மக்களுக்கு மிகுந்த பயன் தரக்கூடிய வகையில் இயக்கப்படும் இந்த ரயிலில் கட்டணம் சற்று கூடுதல், என்றாலும் பயண நேரம் குறைவதை கருத்தில் கொண்டு பயணிகள் இதில் பயணிக்கின்றனர்.
இந்நிலையில், தேஜஸ் ரயிலின் பெயரை தமிழ்ச்சங்கம் ரயில் என பெயர் மாற்றம் செய்யக்கோரி தென்னக ரயில்வே மண்டல பொதுமேலாளரிடம் மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் கோரிக்கை மனு அளித்துள்ளார். அந்த கோரிக்கை மனுவில் வெங்கடேசனின் கோரிக்கையை வழிமொழிந்து 15 எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

அந்த 15 எம்.பி.க்களில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்தரநாத்தும் ஒருவர். மேலும், மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, ரவிக்குமார், வேலுச்சாமி, சண்முகசுந்தரம் அதிமுக ராஜ்யசபா உறுப்பினர் வைத்திலிங்கம் உள்ளிட்டோர் சு.வெங்கடேசன் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சு.வெங்கடேசன் அளித்துள்ள கோரிக்கை மனுவில், பாண்டியன், வைகை, முத்துநகர் என தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்களுக்கு தமிழில் பெயர் வைக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, அதேபோல் தேஜஸ் ரயிலுக்கும் தமிழ் பெயர் சூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications