ரூ.2.10 கோடி பணத்தை கடத்த இப்படியும் வழியிருக்கா.. அதிகாரிகள் 'ஸ்டன்..' விசிக நிர்வாகிகளிடம் விசாரணை
சென்னை: பெரம்பலூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளிடம் இருந்து ரூ.2.10 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லோக்சபா தேர்தலையொட்டி, தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். பெரம்பலூர் லோக்சபா தொகுதியில் வாகன சோதனை நடத்தப்பட்ட நிலையில், அரியலூர் நோக்கி செல்லும் காரில் ரூ.5கோடி ரொக்கப்பணம் கட்டு கட்டாக கொண்டு செல்லப்படுவதாக ஒரு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து, போலீசார் மற்றும் பறக்கும் படையை சேர்ந்த அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

மடக்கிப்பிடிப்பு
போலீசாருக்கு வந்த தகவல் அடிப்படையில், குறிப்பிட்ட அந்த கார், பெரம்பலூர் அரியலூர் சாலையில் சென்று கொண்டிருப்பது தெரியவந்தது. உடனே 'நெடுஞ்சாலை ரோந்து' போலீஸ் மூலம் பேரளி சுங்கச்சாவடி அருகே காரை மடக்கிப் பிடித்தனர். இதையடுத்து கூடுதல் எஸ்பி ரங்கராஜன், காரை பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றார். அங்கு வைத்து மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி உள்ளிட்டோர் முன்னிலையில் காரில் சோதனை செய்யப்பட்டது.

நூதனம்
அப்போது ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. நூதனமாக காரின் நான்கு கதவுகளின் உள்ளே கட்டுக் கட்டாக பணம் மறைத்து வைக்கப்பட்டது தெரியவந்தது. அதேபோல, ஹேண்ட் பேக்குகளில் கட்டு கட்டாக பணம் எடுத்துச் செல்லப்பட்டதும் தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மொத்தம் ரூ.2.10கோடி ரொக்கப்பணம் ரூ.2ஆயிரம் மற்றும் ரூ.500 கட்டுகளாக பறிமுதல் செய்யப்பட்டது.

நால்வர் சிக்கினர்
காரில் மொத்தம் நான்கு பேர் அமர்ந்திருந்தனர். அவர்களிடம் விசாரித்த போது, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் தங்கதுரை, பிரபாகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 2 பேர் என்று தெரியவந்தது. அந்த பணத்தை அவர்கள் எங்கு கொண்டு சென்றனர் என்பது தொடர்பாகவும், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

2 தொகுதிகள்
விடுதலை சிறுத்தைகள் கட்சி இம்முறை திமுக கூட்டணியில் போட்டியிடுகிறது. சிதம்பரம் (தனி) மற்றும் விழுப்புரம் ஆகிய இரு தொகுதிகள் அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications