2 நாட்களுக்கு முன்பே தென்மேற்கு பருவமழை தொடங்கியது... அந்தமானில் கனமழை
சென்னை: தென்மேற்கு பருவமழை, 2 தினங்கள் முன்னதாகவே அந்தமான் நிகோபார் தீவுகளில் தொடங்கி விட்டதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான் நிகோபார் தீவுகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேகக்கூட்டங்கள் உருவாகியுள்ளன. அதன் தாக்கத்தால் மழையும் பெய்து வருகிறது. தெற்கு இந்திய கடல் பகுதியில் இருந்து வளிமண்டல மேலடுக்கு சுழற்சியை நோக்கி காற்று வந்து கொண்டிருக்கிறது.

இதனால் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அடுத்து சில நாட்களில் தெற்கு வங்கக்கடல், வடக்கு அந்தமான் கடல், அந்தமான் தீவுகளை நோக்கி நகர்ந்து செல்லும் என கூறப்பட்டுள்ளது. இதனால், ஏற்கனவே அறிவித்துள்ளது படி, அரபிக்கடல் வழியாக சென்று கேரளாவில் ஜூன் 6-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும்.
இதனிடையே, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் உள்மேற்கு மாவட்டங்களான நீலகிரி, கோவை, தேனி, சேலம், உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இடியுடன் மழை பெய்யும் போது 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். தமிழகத்தில் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அனல் காற்று வீச வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications