2 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. ‘முதல்வரின் முகவரி’ திட்ட சிறப்பு அலுவலராக மோகன் நியமனம்!
சென்னை: 2 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. முதல்வரின் முகவரி திட்டத்தின் சிறப்பு அதிகாரியாக மோகன் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் பணியாற்றி வரும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை நிர்வாக காரணங்களுக்காக தமிழக அரசு அவ்வப்போது பணியிட மாற்றம் செய்வது வழக்கம். அந்தவகையில் 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா பிறப்பித்துள்ளார்.

செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை இயக்குநராகப் பணியாற்றி வந்த டி. மோகன், முதல்வரின் முகவரி திட்டத்தின் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். முதல்வரின் முகவரி திட்டத்தின் சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷ், கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில், அவருக்கு பதிலாக மோகன் அந்தப் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றி வந்த வைத்திநாதன் ஐஏஎஸ் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

முதல்வரின் உதவி மையத்தின் இலவச அழைப்பு எண் '1100' மூலமாக தொடர்பு கொள்பவர்களின் அழைப்புகளை ஏற்பது, கோரிக்கைகளாக பதிவு செய்வது, ஏற்கெனவே பதிவு செய்த மனுவின் நிலவரம், மனுதாரர்களை தொடர்பு கொண்டு மனுக்களின் கண்காணிப்பு மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள், மக்கள் நலத்திட்டங்கள் குறித்த சேவைகளின் மதிப்பீடு பெறுவது போன்ற பணிகளும் நடைபெறுகின்றன.
மேலும் 'ஏஐ சாட்பாட்' என்ற புதிய தொழில்நுட்பம் வாயிலாக விரைவாக பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த துறையின் சிறப்பு அலுவலராக த.மோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications