ஐபிஎல் சூதாட்டம்.. சென்னையில் 2 பேர் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு.. போலீசார் விசாரணை!
சென்னை: சென்னையில் ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக 2 பேர் தகராறு செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐ.பி.எல் சூதாட்டத்தில் ஈடுபட்ட இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. ஐபிஎல் லீக் போட்டிகள் இன்றுடன் நிறைவடைய உள்ளன. ஐபிஎல் போட்டிகள் உச்சகட்டத்தை எட்டி உள்ள நிலையில், எந்த அணி கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் போட்டிகளை பார்த்து வருகின்றனர்.

ஐபிஎல் போட்டிகளை முன்வைத்து சூதாட்டங்களும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஏராளமானோர் சட்டவிரோதமாக ஐபிஎல் பெட்டிங் நடத்துவதும் தொடர்கதையாக உள்ளது. இதுதொடர்பாக அவ்வப்போது சிலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். சூதாட்டத்தில் பணத்தை இழந்து பலர் தற்கொலையும் செய்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான லீக் சுற்றின் கடைசி போட்டி நேற்று நடைபெற்றது. இதில் 219 ரன் இலக்கைத் துரத்திய சி.எஸ்.கே அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது ஆர்.சி.பி. சி.எஸ்.கே அணி வெளியேறி உள்ளது.
இந்நிலையில், இந்த போட்டியை வைத்து நாடு முழுவதும் பெட்டிங் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையிலும் ஐபிஎல் போட்டி சூதாட்டம் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
உதாரணத்திற்கு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் மேட்ச்சில் ஒரு ஓவரில் சிஎஸ்கே அணி எத்தனை ரன்கள் எடுக்கும்? தோனி எத்தனை ரன் அடிப்பார்? நடப்பு ஓவரில் விக்கெட் விழுமா? விழாதா? என்பதுபோல பெட்டிங் கட்டி சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஐபிஎல் பெட்டிங்கில் ரூ.3 லட்சம் ஜெயித்த குஜ்ஜால் ஜெயின், பெட் கட்டிய சந்தீப் ஜெயின் தனக்குப் பணத்தை தரவில்லை என சென்னை வால் டாக்ஸ் சாலையில் தகராறு செய்துள்ளார். ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக சென்னையில் 2 பேர் தகராறு செய்துகொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை ஒட்டி சூதாட்டத்தில் ஈடுபட்ட இருவரிடமும் யானைகவுனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அண்மையில் சென்னை சௌகார்பேட்டையில் செயலி மற்றும் இணையதளம் மூலம் சூதாட்டம் நடத்தி பல கோடி ரூபாய் வரை மோசடி செய்த ஐபிஎல் சூதாட்ட கும்பலை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications