Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழக தேர்தல் வரலாறு: இரண்டே திட்டங்கள்.. காங். ஆட்சிக்கு உலை வைத்த ராஜாஜி.. 1953இல் நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 1953இல் ராஜாஜி எடுத்த தவறான இரண்டு அரசியல் முடிவுகளால் திமுகவின் வளர்ச்சி தமிழ்நாட்டில் செங்குத்தான பாதையை நோக்கி உச்சம் அடைந்தது. 'சொந்த காசில் சூனியம் வைத்துக் கொள்ளுவது' என வடிவேல் ஒரு படத்தில் டயலாக் பேசுவார். அப்படித்தான் 1952 ராஜாஜி தன் தலையில் தானே கொள்ளி வைத்துக் கொண்டார்.

ராஜாஜியின் ஆட்சிக் காலத்தில் காங்கிரஸ் பலம் வாய்ந்த தனிப்பெரும் மாநிலக் கட்சியாக இருந்தது. அதற்குப் போட்டியாக வேறு யாரும் இல்லை. சுமுகமாகப் போய்க் கொண்டிருந்த ஆட்சிக்குத் தான் கொண்டுவந்த ஒரு திட்டமே உலைவைக்கும் என ராஜாஜி நினைத்திருக்கவில்லை. ஒழுங்காகப் போய்க் கொண்டிருந்த பள்ளிக் கல்வித்துறையில் அவர் வைத்த கொள்ளி மாநிலத்தில் கொழுந்துவிட்டு எரிந்தது.

2 wrong plans that Rajaji brought during his rule What happened in 1953

ராஜாஜியின் பிடிவாதம்

'திருத்திய தொடக்கக் கல்வித்திட்டம்' (Modified schem of Elementary Education) என்பதைப் பொதுமக்கள் 'பாதி நாள் பள்ளிக்கூடம்' எனப் புரிந்து கொண்டனர். திமுக,திக அதனை 'குலக் கல்வித் திட்டம்' என வசைபாடின. மறைமுகமாக வர்ணாசரமத்தைப் புகுத்தும் கல்வித்திட்டம் எனக் கொந்தளித்து தங்களின் ஆதரவு பத்திரிகைகளில் எழுதின.

அதுவரை சும்மா கிடந்த சங்கை ராஜாஜி இத்திட்டத்தால் ஊதிக் கொடுத்தார். சந்தர்ப்பம் பார்த்துக் காத்திருந்த எதிர்க்கட்சிகளுக்கு நல்ல வாய்ப்பாக இது அமைந்தது. ஆனால், ராஜாஜி ஆதரவாளர்கள், "அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் இதைப் போன்று தொழிற்கல்விகள் போதிக்கப்படுகின்றன" என்று சமாதானம் சொன்னார்கள். அதற்கும் திமுக தரப்பிலிருந்து வலுவான எதிர்வினை வைக்கப்பட்டது.

"இந்தியாவில் தொழில் என்பது சாதிரீதியாகப் பகுக்கப்பட்டுள்ளது. மேலை நாடுகளில் அப்படியில்லை. இங்கே சாதிக்கு ஒரு தொழில் என்றுள்ளது. நாவிதர் மகன் நாவித தொழிலைச் செய்யவேண்டும். வெட்டியான் மகன் பிணம் எரிப்பைத்தான் செய்ய வேண்டும் என்ற நிலை உண்டாகும்' என எச்சரித்தனர்.

அதை ராஜாஜி புரிந்துகொள்ளவில்லை. அவர் "வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே பள்ளிக்கூடம் என நினைத்து நாம் திருப்தி அடையக்கூடாது" எனக் கேட்டார். ஆனால், இவரது பிடிவாதம் ஆட்சிக்கு ஆபத்தாக மாறிக் கொண்டிருக்கிறது என்பதை அவர் உணரவில்லை. பிறந்து மூன்று வருடங்களே ஆன திமுகவின் செல்வாக்கு இந்தத் திட்டத்திற்கு எதிராக அணி திரட்டலால் மக்கள் மத்தியில் கூடிக் கொண்டிருக்கிறது என்ற அரசியல் பாடத்தை அவர் கற்கவில்லை.

ஆனால், காமராஜர் சட்டென்று புரிந்துகொண்டார். "இந்தப் பைத்தியராகா திட்டத்தை ஒழிப்பதே மறு வேலை" என்று ஒரு காங்கிரஸ் தலைவரே அறிவிக்க வேண்டிய நிலை உருவானது. காமராஜர் எதிர்ப்பிலும் ராஜாஜி ஆட்சிக்கு ஆதரவு நிலைப்பாட்டையும் எடுத்திருந்த ம.பொ.சிவஞானம் இந்தக் கல்வித் திட்டத்தை ஆதரித்துக் கூட்டங்கள் பேசினார். அந்தக் காலத்து தஞ்சாவூர் ஜில்லாவில் அவர் பங்கேற்றுப் பேசிய கூட்டத்தில் கல்வீச்சு நடந்தது. அதில் அவர் மண்டை உடைந்தது.

குழந்தைகள் மீதான உரிமை மீறல்

ராஜாஜியின் கல்வித் திட்டத்தை சி.பா.ஆதித்தனார் எதிர்த்தார். "குழந்தைகள் உரிமை குறித்த சர்வதேச உரிமைகளின் மரபுகளை மீறுவதாக" அவர் கருத்துக் கூறினார். அப்படி இருந்தும் ராஜாஜி மசியவில்லை. விடாப்பிடியாகப் பரிசோதனை முறையில் பெரியகுளம் வட்டாரத்தில் வகுப்புத் தேர்வாக திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனால், எந்தக் குழந்தையும் அத்திட்டத்தைத் தேர்வு செய்ய முன்வரவில்லை என்பதால் தொடங்குவதற்கு முன்னதாகவே திட்டம் முளை விடாமல் கருகிப் போனது.

இந்தக் கல்வித்திட்டத்தை தங்களின் போராட்டத்திற்கு மிகப்பெரிய வாய்ப்பாக திமுக எடுத்துக்கொண்டது. அதைவிடத் திராவிடர் கழகம் களத்தில் முன்னே நின்றது. திமுகவும் திகவும் அதுவரை எதிர் எதிர் பக்கம் இருந்தன. அண்ணாதுரை தனிக் கட்சி ஆரம்பித்த பிறகு திராவிடர் கழகத்தினர் திமுக மீது விரோத போக்கைக் கடைப்பிடித்து வந்தனர்.

அதை மீறி இந்த இரண்டு சக்திகளையும் ராஜாஜியின் தவறான கல்வித் திட்டம் மீண்டும் ஒன்றிணையச் செய்தது. 'திருத்திய கல்வித் திட்டத்தை' தொடங்கிய சில நாட்களிலேயே 1953 ஜூன் 21 ஆம் தேதியை திமுகவும் திகவும் எதிர்ப்பு நாளாக அறிவித்து, ஜூலை 8 முதல் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரிடமும் எழுத்துப்பூர்வமாக ஆதரவு திரட்டுவது என ஒரு நோக்கத்தை முன்வைத்தது.

இத்திட்டத்தை முறியடிக்க நினைத்த அன்றைய முதல்வர் ராஜாஜி சட்டசபை பக்கம் யாரும் அனுமதியின்றி நுழைவதற்குத் தடைவிதித்தார். அத்தடையை மீறி திக தொண்டர்கள் நுழைய முற்பட்டனர். அப்போது நாடாளுமன்ற உறுப்பினர் வ.வீராசாமி உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். உள்ளே நுழைய முற்பட்டவர்கள் மீது தடியடி நடத்தி, கூட்டத்தினரை காவல்துறை கலைத்தது.

ராஜாஜி ஆட்சிக்கு எதிராக ஒரு அணி திரட்டலை 'பராசக்தி' படத்தின் மூலம் உருவாகியிருந்தார். அந்தப் படம் திரையில் தீப்பொறிப் பறக்கும் வசனங்கள் மூலம் மறைமுகமாக ராஜாஜியை வசைபாடியிருந்தது.
1952 அக்டோபர் 17 ஆம் தேதி படம் வெளியானது. அந்தக் கொந்தளிப்பு கழகத் தொண்டர்கள் மத்தியில் நீரில் பூத்த நெருப்பாகக் கனன்று கொண்டிருந்தது. சந்தர்ப்பம் பார்த்துக் காத்திருந்த தொண்டர்களை ராஜாஜியின் புதிய கல்வித் திட்டம் கிளர்ந்து எழச் செய்தது.

போராட்டக்காரர்கள் மீது தடியடி

1952க்கு முன்பாக இருந்த தேர்தல் முறை என்பது வேறு. இந்த ஆண்டில்தான் வாக்குரிமையில் ஒரு மாபெரும் புரட்சி நடந்தது. வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை என்ற முறை 1952இல் தான் கிடைத்தது. இந்தியாவில் அதுவரை வாக்குரிமை அளிக்க உரிமை இல்லாமல் இருந்த பெரும்பகுதி மக்கள் வாக்குரிமை பெற்றிருந்தனர். திமுக போன்ற புதியதாக உருவான ஒரு மாநில அரசியல் கட்சிக்கு இது ஒரு சாதகமான அம்சமாக மாறியது.

ராஜாஜி பாதி நாள் படிப்பு திட்டத்தின் மூலம் மக்களின் வெறுப்பைச் சம்பாதித்தார். மேலும் முன்னதாக மொழிவாரி மாநில பிரிவினை போர் உச்சத்தை எட்டியபோது அதை எதிர்த்தார். மாநிலம் பிரிக்கப்படுவதையும் ஆந்திர மாநிலம் கேட்டு, ஸ்ரீராமலு 58 நாள் உண்ணாவிரதம் இருந்து போராடியதையும் அவர் கண்டுகொள்ளவில்லை. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கக் காங்கிரஸ் தொடர்ந்து தவறியது. எனவே ராஜாஜியின் ஆட்சியின் மீதான வெறுப்பு காங்கிரஸைப் பாதித்தது.

இதனால் மெல்ல 1952 தொடங்கி 1967 வரை திமுகவின் வளர்ச்சி செங்குத்தாக உயர்ந்துகொண்டே சென்றது. ராஜாஜி மீது காட்டிய அதே எதிர்ப்பை காமராஜர் மீதும் திமுக காட்சியது. 'குலக் கல்வித் திட்டம்' என்ற போராட்டத்தில் திமுக பக்கம் இருந்த பெரியார் ஈ.வெ. ராமாமி, காமராஜ் ஆட்சியை ஆதரித்தும் காங்கிரசினால் மாநில ஆட்சியை 1967 இல் நடைபெற்ற தேர்தலில் தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. 1953இல் ராஜாஜி செய்த தவறுகள் காங்கிரஸ் ஆட்சியைத் தமிழ்நாட்டில் வேரோடு வெட்டி வீசியது.

- கடற்கரய்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+