எமனாக வந்த ஏசி... தீ விபத்தில் சிக்கி 2 வயது குழந்தை பலி - பல்லாவரத்தில் சோகம்
பல்லாவரத்தில் வீட்டினுள் ஏசியில் மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் 2 வயது குழந்தை உயிரிழந்துள்ளது.
சென்னை: பல்லாவரத்தில் வீட்டினுள் ஏசியில் மின்கசிவு ஏற்பட்டு நிகழ்ந்த தீ விபத்தில் 2 வயது குழந்தை உடல் கருகி உயிரிழந்துள்ளது. குழந்தையின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
உயிரிழந்த குழந்தையின் பெயர் பிரிஜிதா. இவர் சென்னை பல்லாவரம் அடுத்த கவுல்பஜார், யசோதா நகரை சேர்ந்தவர் சங்கீதாவின் மகளாவார். சங்கீதா இன்று மாலை தனது வீட்டின் வாசலில் அமர்ந்து பூக் கட்டிக் கொண்டு இருந்துள்ளார்.
பிரிஜிதா படுக்கையறையில் தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டினுள் திடீரென தீப்பிடித்துள்ளது. உடனே அதிர்ச்சியடைந்த சங்கீதா வீட்டிற்குள் ஓடினார். குழந்தையை தூக்க முயன்ற போது தீ மளமளவென பரவியதால் குழந்தையை மீட்க முடியாமல் தடுமாறினார்.
அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயணைப்பு துறையினரை வரவழைக்கப்பட்டு தீயை அணைத்தனர். இறுதியில்
குழந்தையை பார்த்த போது கட்டிலோடு குழந்தை முற்றிலுமாக எரிந்து போயிருந்தது.
தகவலறிந்து சென்ற சங்கர் நகர் போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் ஏசியில் ஏற்பட்ட மின் கசிவின் காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.