கண்ணாடியை திருப்பினா மட்டும் வண்டி எப்படி ஓடும் ஜீவாஆஆஆஆஆஆ! #demonetisation
பணமதிப்பு இழப்பு அறிவிக்கப்பட்டு இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைகிறது.
சென்னை: 2016 - இதே நாளில்தான் அந்த அறிவிப்பு வெளியானது.. பழைய 500,1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட நாள்தான் இன்று!!
இந்த அறிவிப்பு வெளியானதுமே ஒட்டுமொத்த நாடும் ஸ்தம்பித்து போய் விட்டது. ஏ.டி.எம் மையங்கள் செயல்படாது என்றும் கூடவே தெரிவிக்கப்பட்டது. கோடிக்கணக்கான மக்களை நடுத்தெருவில் அலையவைத்தது.
புதிய நோட்டுகள்
புதிய ரூபாய் நோட்டுக்கள் உடனடியாக கையில் கிடைக்காமலும், அது எப்படி இருக்கும் என்றுகூட தெரியாமல் மக்களை அல்லாட விட்டது. புதிய ரூபாய் நோட்டுகளை போதிய அளவில் அச்சடிக்காமலும் விட்டது.
உயிரிழந்த அப்பாவிகள்
ஏடிஎம் வரிசையில் சோறு தண்ணி இல்லாமல் காத்த காத்து நின்ற நூற்றுக்கணக்கானோரை உயிரிழக்க செய்தது. இதை பற்றி கேட்டதற்கு, "எல்லையிலே ராணுவ வீரர்கள் தியாகம் செய்யும்போது, இதைக்கூட பொறுத்துக்கொள்ள முடியாதா" என்று வெகுஜனங்களை அசிங்கப்படுத்தியது.
இது எங்கள் சாதனையே
காங்கிரஸ் முதல் ஒரு கட்சி விடாமல் எல்லோருமே இதை கண்டித்தார்கள்.. எதிர்த்தார்கள்.. கடுமையாக விமர்சித்தார்கள்.. ஆனால் மத்திய பாஜக அரசு எதையுமே காதில் வாங்கவில்லையே... காதில் போட்டுக் கொள்ளவில்லை என்றாலும்கூட பரவாயில்லை, இதனை ஒரு சாதனை என்று இப்போதுவரை சொல்லி கொண்டு இருப்பதைதான் மக்களால் ஜீரணிக்கவே முடியவில்லை.
தலையில் விழுந்தது
கடைசியில் புதிய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க 8000 கோடியும், ஏடிஎம் மிஷன்களை ரெடி பண்ண 35000 கோடியும், நாட்டின் பொருளாதார இழப்பு 1,50,000 கோடி என கணக்கு காட்டி மக்கள் தலையில் சுமத்தப்பட்டதுதான் மிச்சம்!!
ரகசியம் என்ன?
இதெல்லாம் நடந்து இப்போது 2 வருஷம் ஆகிவிட்டது. 1000 ரூபாயை ஒழிக்கிறேன் என்று சொல்லி அதிக மதிப்புடைய 2000 ரூபாயை கொண்டு வந்த ரகசியம் என்னவென்றே இதுவரை தெரியவில்லை.
மீட்கப்பட்டு விட்டதா?
அதேபோல உறுதியளித்தபடி நாட்டில் கருப்பு பணம் எல்லாம் துடைத்தெறியப்பட்டு விட்டதா? அம்பானி, விஜய் மல்லையா உள்ளிட்டோரின் கருப்பு பணங்கள் அனைத்தும் புழக்கத்தில் இல்லாமல் பறிமுதல் செய்யப்பட்டுவிட்டதா? என்றும் தெரியவில்லை... "கண்ணாடியை திருப்பினா மட்டும் வண்டி எப்படி ஓடும் ஜீவாவாவாவா.....?" என்றுதான் கேட்க தோன்றுகிறது.