2014 உச்ச நீதிமன்ற தீர்ப்பு என்ன தெரியுமா? ஆளுநருக்கு எழுதிய கடிதம்.. பாயிண்ட்களை அடுக்கிய முதல்வர்
சென்னை: செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என்பதில் அரசு உறுதியாக உள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி எழுதிய கடிதத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்து இருந்தார். தற்போது முதல்வர் எழுதிய அந்த கடிதத்தில் இடம் பெற்றுள்ள விவரங்கள் வெளியாகியிருக்கிறது. அதில் ஸ்டாலின் குறிப்பிட்டிருப்பதை இங்கே காணலாம்.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து தமிழக ஆளுநர் டிஸ்மிஸ் செய்துள்ளதாக நேற்று இரவு தகவல் வெளியானது. இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இந்த விவகாரத்தைச் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்தார்.

அடுத்த சில மணிநேரங்களிலேயே தனது அறிவிப்பை நிறுத்தி ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியானது. அட்டர்னி ஜெனரல் ஆலோசனை பெற உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளதாகவும் அதுவரை முடிவை நிறுத்தி வைப்பதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என்று ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் கடிதம் எழுதியுள்ளார்.
சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகு ஆளுநருக்கு பதில் கடிதம் முதல்வர் ஆளுநருக்கு அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் முதல்வர் கூறிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. ஆளுநருக்கு முதல்வர் எழுதிய கடிதத்தில், இடம் பெற்றுள்ள சில முக்கிய தகவல்கள் வருமாறு:- செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.
மாநில மக்களின் நம்பிக்கையே எங்களது சொத்தாக இருக்கிறது. எனது அமைச்சரவையில் யாரையும் நீக்கும் அதிகாரம் உங்களுக்கு இல்லை. அமைச்சர்களை நேரடியாக நீக்குவதற்கோ நியமிப்பதற்கோ ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. என்னுடைய பரிந்துரையின்றி அமைச்சரை நீக்குவது வரம்பு மீறிய செயல். சட்ட ஆலோசனை கூட பெறாமல் ஆளுநர் முடிவு எடுத்திருக்கிறார் என்பது வெளிப்படையாக தெரிகிறது" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், 2014 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி அமைச்சரை நீக்க பிரதமர் அல்லது முதல்வருக்கே அதிகாரம் உள்ளது. முதல்வரின் பரிந்துரைப்படியே அமைச்சர்களை, சேர்க்கவோ, நீக்கவோ ஆளுநரால் முடியும் என சட்டம் கூறுகிறது. என்னுடைய பரிந்துரை இல்லாமல் அமைச்சரை நீக்குவது வரம்பு மீறிய செயல். என்று ஸ்டாலின் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications