மேயருக்கு எதிராக ஊழல் புகார்! 1973இல் நடந்தது என்ன? திமுகவை அலறவிட்ட எதிர்க்கட்சிகள்?
சென்னை: கோவை மற்றும் நெல்லை ஆகிய இரண்டு மாநகர திமுக மேயர்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், இதே போன்று 1973இல் திமுக ஆட்சிக்கு நெருக்கடி தரும் வகையில் சென்னை கார்ப்பரேஷன் கவுன்சில் கலைக்கப்பட்டது. அப்போது என்ன நடந்தது? ஏன் கலைத்தார்கள்?
மக்களவைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற திமுகவுக்கு, கோவை மற்றும் நெல்லை மேயர்கள் பதவியை ராஜினாமா செய்துள்ள விவகாரம் மிகப்பெரிய பின்னடைவாக மாறியுள்ளது. கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா செய்த அதேநாள் நெல்லையிலும் ஒரு பூகம்பம் வெடித்துள்ளது. சில ஆண்டுகளாகவே நீரில் பூத்த நெருப்பாகக் கசிந்துவந்த திமுக உட்கட்சி பூசலை வெட்டவெளிச்சம் போட்டுக் காட்டும் விதமாக மேயர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கோவை மேயராக கல்பனா ஆனந்தகுமார் பதவியேற்றது முதலே அவரது தலைக்கு மேலாகக் கத்தி ஒன்று தொங்கிக் கொண்டேதான் இருந்தது. கட்சியில் பல சீனியர் வார்டு உறுப்பினர்கள் இருக்கும்போது இளம் வார்டு உறுப்பினராக வெற்றி பெற்று வந்த கல்பனாவின் பெயரை செந்தில் பாலாதான் முன்மொழிந்தார். கொங்கு மண்டல திமுக அவரது கட்டுப்பாட்டிலிருந்ததால், உடனே மேயர் நாற்காலியில் உட்கார்ந்தார் கல்பனா.
பதவியேற்ற போது அவர் சாதாரண குடும்ப பின்புலத்தைக் கொண்டிருந்தார். பதவியேற்புக்குப் பின் முதல்வர் ஸ்டாலினைச் சந்திக்கப் பேருந்தில் பயணம் செய்த செய்தி பரபரப்பாகப் பேசப்பட்டது. இவ்வளவு எளிமையாக இருக்கிறாரே என்று பலரும் அவரைப் பற்றிப் பேசினார். இளம் வயதிலேயே இந்தப் பதவிக்கு கல்பனா வந்ததால், அவருக்குக் கொஞ்சம் நோக்கு போக்கு தெரியவில்லை என்கிறார்கள் கோவை உபிகள். செந்தில் பாலாஜி வெளியில் இருக்கும் வரை அவரை எதிர்ப்பது அவரது உடன்பிறப்புகளுக்குக் கஷ்டமாக இருந்தது. அவர் சிறைக்குச் சென்றபிறகு பலருக்கும் நல்ல வாய்ப்பாக அமைந்தது.
செந்தில் பாலாஜியின் குறுக்கீடு குறைந்த பிறகு மேயர் கல்பனா குமாரின் ஆதிகம் அதிகரித்துள்ளது. கூடவே அவரது தம்பியின் வேட்டையும் அதிகமாகிவிட்டதாகப் பலரும் சொல்கிறார்கள். கல்பனா மீது பல பணமோசடி புகார்கள் முன்வைக்கப்பட்டன. இதனிடையே தான் மேயரின் கணவர் மாமுல் கேட்கும் ஆடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சி கொடுத்தது. கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்ட விவகாரத்தில் மேயர் தனக்கு டார்ச்சர் கொடுப்பதாக சரண்யா என்ற பக்கத்துவீட்டுப் பெண் புகார் கூறினார். இதற்கு ஒரு ஆடியோ வெளியானது.

தொடர்ந்து புகாரில் சிக்கிய கல்பனாவுக்கு எதிராக முதல்வரின் தனிப்பிரிவுக்கும் புகார் போனது. இதனிடையே டெண்டர் விவகாரம் தொடர்பாக லட்சம் பெறுவது தொடர்பாக கல்பனா தலை உருளத் தொடங்கியது. வாட்ஸ் அப் குழு ஆரம்பித்து கல்பனா வசூல் வேட்டை நடத்துவதாகப் பேச்சு அடிப்பட்டது. 'தனக்காகக் கேட்கவில்லை நகர்ப்புற அமைச்சர் கேட்கிறார்' என்று கல்பனா பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் டெண்டர் எடுத்தவர்கள் உரியக் காலத்தில் தொகையைப் பெறமுடியாமல் அல்லாடி உள்ளனர்.
இந்நிலையில் கல்பனா தனது வீட்டுக்கு வெள்ளையடிக்க ஒரு கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது என்ற புகாரை அவரது கட்சியினரே வெளிச்சம் போட்டுக் காட்டத் தொடங்கினர். கூடவே மேயரின் தம்பி குடியிருந்து வந்த பகுதியில் உள்ள பெண் ஒருவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார். தம்sபியும் கணவரும் இன்னொரு பக்கம் வசூல் வேட்டை நடத்தி வருவதாகச் சொல்லப்பட்டது. திமுக கவுன்சிலர்களே கல்பனாவுக்கு ஆதரவாக இல்லை. மாமன்றக் கூட்டத்தில் திமுக கவுன்சிலர்களையே கல்பனா எதிர்த்துப் பேசியுள்ளார்.
இந்நிலையில்தான் கடந்த 4 நாட்கள் சென்னையிலிருந்த கல்பனாவை திமுக தலைமை அழைத்து விசாரித்துள்ளது. கோவை எம்பி தேர்தலில் சரியாக வேலை செய்யாதது உட்படப் பல விசாரணைகள் நடந்ததாகச் சொல்லப்படுகிறது. தலைமை சொன்ன விசயங்களைக் கேட்டுக் கொண்ட கல்பனா நேற்று கோவைக்குச் சென்றார். மறுபேச்சு எதுவும் பேசாமல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவரைப் போலவே பல காலமாக நெல்லை மேயர் சரவணனுக்கு எதிராக உட்கட்சி பூசல் தலைவிரித்தாடி வந்தது. இந்தப் பூசல் காரணமாக திமுக கவுன்சிலர்களே மேயருக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தி வந்தனர். இதற்கு முன்பே அவர் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்த சம்பவமும் நடத்தது.

"இந்த மாதிரியான அரசியல் ரீதியான பின்னடைவுகள் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்குச் சரிவை ஏற்படுத்தும்" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம். அவர் கடந்த காலங்களில் இந்த மாதிரியான நகர மன்றத் தேர்தல்களில் நடந்த சர்ச்சைகள் பற்றி நினைவுகூர்ந்துள்ளார். பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், "திருநெல்வேலி மேயருக்கு கடந்த ஒரு வருடமாகவே பிரச்சினை இருந்து வருகிறது. திருநெல்வேலி தொகுதியைக் காங்கிரசுக்குக் கொடுத்ததற்குக் காரணமே திமுக உட்கட்சி பிரச்சினைதான். திருநெல்வேலியில் பிள்ளைமார் சமூகத்தின் பிரதிநிதியாக அவருக்கு மேயர் பதவி கொடுக்கப்பட்டது. வேறு எந்தப் பகுதியிலும் இந்தச் சமூகத்தினருக்குப் பிரதிநிதித்துவம் கொடுக்க முடியாது.
ஆகவே, நெல்லையில் கொடுக்கப்பட்டது. இதற்கே அவர் முதல்முறையாக கவுன்சிலராக பதவிக்கு வந்தவர். அனுபவம் குறைவு. ஆகவே, பிற கவுன்சிலர்களுடன் அவரால் ஒத்துழைத்து வேலை செய்ய முடியவில்லை. முன்பே ஒருமுறை ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டு, திரும்பப்பெற்றுக் கொண்டார். அவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தலைமை தலையிட்டு அந்தப் பிரச்சினையைக் கொஞ்சம் அடக்கிவைத்தது.
கோவை மேயர் ராஜினாமா கதை வேறு மாதிரி. அவர் ஒரு பெண் மேயர். அவரது கணவரின் தலையீடு அதிகம் உள்ளதாகக் குற்றச்சாட்டு அடிக்கடி எழுந்தது. எனவே அவரும் ராஜினாமா செய்துள்ளார். இது ஏன் இந்தளவுக்குக் கவனம் பெற்றுள்ளது என்றால், ஒரே நேரத்தில் 2 மேயர்கள் ராஜினாமா என்பதால்தான். இதைப் போன்று அதிரடி ராஜினாமா எல்லாம் அதிமுக ஆட்சிக்காலத்தில்தான் நடக்கும். இப்போது கோவை திமுக எம்பி ஆக உள்ள கணபதி ராஜ்குமார் கூட, முன்பு மேயராக இருந்தவர்தான். கராதே தியாகராஜன் துணை மேயராக இருந்தார். அவர் திடீரென்று ஜெயலலிதா ஆட்சியில் மேயரானார். இவை எல்லாம் அதிமுகவில் சகஜம். திமுகவுக்கு புதியது.
ஆகவேதான் இது அரசியல் அலைகளை ஏற்படுத்தியுள்ளது. 1973இல் மு.கருணாநிதி சென்னை கார்ப்பரேஷன் கவுன்சிலையே கலைத்தார். அது அன்றைக்குப் பரபரப்பாகப் பேசப்பட்டது. வருகைப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்து பண மோசடி நடந்துவிட்டதாகச் சட்டசபையில் எதிர்க்கட்சியினர் சர்ச்சையைக் கிளம்பினார்கள். அதிமுகவை எம்.ஜி,ஆர் தொடங்கி இருந்த காலகட்டம். திண்டுக்கல் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியான காலம். திமுகவுக்குச் சட்டமன்றத்தில் 184 உறுப்பினர்கள் இருந்தனர். எதிர்க்கட்சி என்பது வலுவாக இல்லாத காலகட்டம். ஆனாலும், எதிர்க்கட்சிகளின் அழுத்தம் தாங்காமல் கருணாநிதி அதைக் கலைத்தார்.
அதன்பின்னர் 1973 முதல் 96 வரை மேயர் தேர்தலே நடத்தவில்லை. பஞ்சாயத்துத் தேர்தல் கட்டாயம் என சட்டம் வந்த பிறகுதான் மீண்டும் தேர்தல் நடந்தது. அதுவும் மக்களால் தேர்வு செய்யப்படுபவர்தான் மேயர் என மாற்றினார்கள். அப்போதுதான் முதன்முறையாக மேயர் பதவிக்கு ஸ்டாலின் போட்டியிட்டார். கோவை மேயர் விவகாரத்திற்கு வருவோம். அவர் ஒரு பெண். அரசியலுக்கு வரும் பெண்கள் பலர் அரசியல் உறுதி இல்லாமல் உள்ளனர். அதான் பிரச்சினை. அவரது குடும்பத்தினரின் தலையீடு வரும்போது அங்கே பிரச்சினை வெடிக்கிறது. பெண்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் உரிய இடம் கொடுக்க வேண்டும் என்பது சரி. ஆனால், களத்திற்கு வரும் பெண்களுக்கு அரசியல் பயிற்சி இன்னும் கூடுதலாகத் தர வேண்டும்" என்கிறார்












Click it and Unblock the Notifications