Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வக்ப் சட்டத் திருத்தம்: மதரஸா போன்ற..முஸ்லிம் கல்வி நிலையங்களின் எதிர்காலம் பாதிக்கப்படுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வக்ஃப் ( சட்ட திருத்தம்) மசோதா, பெரும் பரபரப்பிற்கும் விவாதங்களுக்கும் இடையே நாடாளுமன்றத்தில் உள்ள இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவரும் ஒப்புதல் தந்துவிட்டதால் சட்டமாகிவிட்டது. இதை எதிர்த்து பல எதிர்க் கட்சிகளும் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளன. இந்த புதிய சட்டம், குறிப்பாக நாடு முழுக்க உள்ள முஸ்லிம் சமூகத்தின் கல்வி நிலையங்களான மதரஸாக்களின் எதிர்காலம் பற்றிய விவாதங்களை கிளறியுள்ளது. வக்ஃப் சொத்துக்களின் உரிமையாளர்கள் யார், அவற்றை எப்படி நிர்வகிப்பது, இந்த சொத்துக்கள் முஸ்லிம் சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்கு எப்படி உதவப் போகின்றன என்பது போன்ற கேள்விகள் இப்போது முக்கியமானதாக பார்க்கப்படுகின்றன.

சிறுபான்மை விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜூ இந்த சட்டத்தை பற்றி பேசுகையில், "இந்த மாற்றங்கள் எல்லாமே வக்ஃப் சொத்துக்களை நிர்வகிப்பதில் ஒளிவுமறைவு இருக்கக் கூடாது என்பதற்காகத்தான். யார் என்ன செய்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரிய வேண்டும். நாங்கள் இதை எந்த தனிப்பட்ட ஆதாயத்திற்காகவும் செய்யவில்லை. இந்த சட்டத்தின் முக்கிய நோக்கம் சொத்துக்களை சரியாக நிர்வகிப்பதும், யார் யாரை நிர்வாகிகளாக நியமிப்பது என்பதும்தான்," என்று திட்டவட்டமாக கூறினார். மேலும், வக்ஃப் சொத்துக்களை சிலர் தவறாக பயன்படுத்துகிறார்கள், சிலர் ஆக்கிரமித்து வைத்திருக்கிறார்கள். இதனால் நிறைய சட்ட பிரச்சனைகள் வருகின்றன. இந்த புதிய சட்டம் வந்தால் இதையெல்லாம் தடுக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Waqf Muslim

இந்த புதிய சட்டத்தில் சில முக்கியமான விஷயங்கள் உள்ளன. முதலாவதாக, எல்லா வக்ஃப் சொத்துக்களையும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப் போகிறார்கள். இதனால் எந்த சொத்து யாருக்கு சொந்தம், அது எங்கே இருக்கிறது போன்ற விவரங்களை எளிதாக தெரிந்துகொள்ள முடியும். இரண்டாவதாக, இதுவரை வக்ஃப் வாரியங்களில் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்கள் தான் முக்கிய பொறுப்புகளில் இருந்தார்கள். ஆனால், இந்த புதிய சட்டத்தின்படி முஸ்லிம் அல்லாதவர்களும் அந்த பொறுப்புகளில் நியமிக்கப்படலாம். மூன்றாவதாக, ஒவ்வொரு வருடமும் வக்ஃப் சொத்துக்களின் கணக்கு வழக்குகளை தணிக்கை செய்வார்கள். அதாவது, வரவு செலவு கணக்குகளை சரி பார்ப்பார்கள். இதனால் சொத்துக்கள் மற்றும் பணம் எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதை கண்காணிக்க முடியும்.

வக்ப் சொத்துக்கள் எப்படி கிடைக்கின்றன?

வக்ஃப் சொத்து என்றால் என்னவென்று இன்னும் கொஞ்சம் விரிவாக பார்க்கலாம். இஸ்லாமிய சட்டத்தின்படி, மசூதிகள், மதரஸாக்கள், ஏழை எளியவர்களுக்கான தங்கும் இடங்கள், மருத்துவமனைகள் போன்ற மத அல்லது தொண்டு நிறுவனங்களுக்காக முஸ்லிம்கள் தங்கள் சொத்துக்களை தானமாக கொடுப்பதுதான் வக்ஃப் என்று அழைக்கப்படுகிறது. இந்த சொத்துக்களை நிர்வகிக்கும் பொறுப்பு மாநில அளவில் உள்ள வக்ஃப் வாரியங்களுக்கு உள்ளது. இந்தியாவில் சுமார் 8.72 லட்சம் வக்ஃப் சொத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், இதில் நிறைய சொத்துக்கள் சரியாக பயன்படுத்தப்படாமல் சும்மா கிடக்கின்றன. சில சொத்துக்களை மற்றவர்கள் ஆக்கிரமித்து வைத்திருக்கிறார்கள். இதனால் வக்ஃப் சொத்துக்களை நிர்வகிப்பதில் நிறைய குறைகள் இருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வந்துகொண்டே இருக்கின்றன.

இந்தியாவில் 38 ஆயிரம் மதரஸாக்கள்

முஸ்லிம் கல்வியில் வக்ஃப் சொத்துக்களுக்கு ஒரு முக்கியமான வரலாறு உண்டு. பல நூற்றாண்டுகளாக மதரஸாக்கள், பள்ளிகள், கல்லூரிகள் எல்லாமே வக்ஃப் சொத்துக்களின் மூலம் கிடைத்த நிதியில் தான் கட்டப்பட்டன. உதாரணமாக, மதரஸா ஹாஜிஉத்தின் கான் (இப்போது இது சாகிர் ஹுசைன் கல்லூரி என்று அழைக்கப்படுகிறது), அலியா பல்கலைக்கழகம், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதி எல்லாமே வக்ஃப் நிதியுதவியால் உருவானவை தான். இப்போது கூட மதரஸாக்கள் தங்கள் பாடத்திட்டத்தில் காலத்திற்கு ஏற்ற மாதிரி நிறைய மாற்றங்களை செய்து வருகிறார்கள். ஆங்கிலம், கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற பாடங்களையும் சேர்த்து படிக்க கொடுக்கிறார்கள். இந்தியாவில் கிட்டதட்ட 38,000 மதரஸாக்கள் இருக்கின்றன. இதில் நிறைய மதரஸாக்களுக்கு அரசாங்கத்தின் அங்கீகாரமும் உள்ளது.

முஸ்லிம் அல்லாதவர்கள்

ஆனால், இந்த 2025 ஆம் ஆண்டு வக்ஃப் சட்டத்தில் கொண்டுவரப்படும் மாற்றங்களால் முஸ்லிம் சமூகத்தில் நிறைய கவலைகள் எழுந்துள்ளன. ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அப்துல் மதின் கூறுகையில், "வக்ஃப் வாரியங்களில் முஸ்லிம் அல்லாதவர்களை சேர்ப்பதால் நிர்வாகத்தில் குழப்பங்களும், மோதல்களும் வர வாய்ப்புள்ளது. அரசு சமூக தலைவர்களுடன் பேசி இந்த கவலைகளை தீர்க்க வேண்டும்," என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், கல்விக்காக கிடைக்கும் நிதியை குறைத்தால் முஸ்லிம் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நாஃபீஸ் அகமது அன்சாரி கூறுகையில், "மதரஸாக்களில் இப்போது நவீன கல்வி முறைகள் வந்துவிட்டன. இந்த புதிய சட்டம் சரியாக செயல்படுத்தப்பட்டால் முஸ்லிம் மாணவர்கள் கல்வியில் இன்னும் முன்னேற்றம் அடைவார்கள் என்று நான் நம்புகிறேன். ஆனால், நிதி பற்றாக்குறை மற்றும் சமூகத்தில் உள்ள சில கட்டுப்பாடுகள் போன்ற பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கின்றன," என்றார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பு

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை பேராசிரியர் முகமது சஜ்ஜாத் வேறு விதமாக கூறுகிறார். "வக்ஃப் சொத்துக்களை நிர்வகிப்பதில் ஏற்கனவே நிறைய ஊழல், முறைகேடுகள் மற்றும் நிதி பற்றாக்குறை இருக்கிறது. மதரஸாக்களை நவீனமயமாக்குவது என்ற பெயரில் நிறைய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. அதுமட்டுமில்லாமல், நகரங்களில் இருக்கும் விலை உயர்ந்த வக்ஃப் சொத்துக்களை விற்றுவிட்டார்கள். இதனால் கல்விக்கு கிடைக்க வேண்டிய நிறைய பணம் நின்றுவிட்டது," என்று அவர் கவலை தெரிவித்துள்ளார்.

ஆக மொத்தத்தில், 2025 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்த வக்ஃப் சட்டத்திருத்தம் இந்தியாவில் முஸ்லிம் மாணவர்களின் கல்வி வாய்ப்புகளை அதிகரிக்குமா அல்லது குறைக்குமா என்பது ஒரு பெரிய கேள்வியாக இருக்கிறது. சிலர் இந்த சட்டம் வக்ஃப் சொத்துக்களை சரியாக நிர்வகிக்க உதவும் என்று நினைக்கிறார்கள். ஆனால், இன்னும் சிலர் இந்த சட்டத்தால் முஸ்லிம் கல்வி நிலையங்களுக்கு என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்று பயப்படுகிறார்கள். இந்த சட்டத்தின் எதிர்காலம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பொறுத்தே அமையும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+