ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 22 கொரோனா நோயாளிகள் பலி
சென்னை: ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் 22 பேர் ஒரே நாளில் பலியாகியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக கொரோனா நோய்தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது. தற்போது வரை சுமார் 2,600 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 500க்கும் அதிகமானவர்கள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
5 பெண்கள்
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 5 பெண்கள் மற்றும் 17 ஆண்கள் என நேற்று 24 மணி நேரத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
22 பேர் உயிரிழப்பு
கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் மற்றும் அறிகுறிகளுடன் சிகிச்சைக்கு வந்தோரும் இதில் அடக்கம். ஒரே நாளில் கொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நபர்களில் 22 பேர் உயிரிழந்த சம்பவம் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரணம்
நோய் பாதிப்பு ஏற்பட்ட பிறகு பலரும் வீட்டிலேயே தங்களுக்கு தெரிந்த சிகிச்சை முறைகளை செய்து கொண்டிருக்கிறார்கள். மூச்சுத் திணறல் , காய்ச்சல் அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்ட பிறகுதான் அவர்கள் தனியார் மருத்துவமனையை அல்லது அரசு மருத்துவமனையை நாடுகிறார்கள்.
விழிப்புணர்வு
கொரோனா முற்றிய நிலையில் நோயாளிகள் சிகிச்சைக்கு வருவதால்தான் இதுபோல இறப்பு ஏற்படுவதாக மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர் ஒருவர் தெரிவித்தார் என முன்னணி நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவில் பரவியுள்ள உருமாறிய கொரோனா ஆபத்தானது என்பதால், பொதுமக்கள் விழிப்போடு இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.