இது லிஸ்டிலேயே இல்லையே.. விஜய் முதல்வராக பதவியேற்கும் நிகழ்ச்சி.. நயினார், தமிழிசை பங்கேற்பு
சென்னை:தமிழக சட்டமன்ற தேர்தலில் 4 முனை போட்டி நிலவியது. இதில் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றது. விஜய் இன்று
முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார். அவருடன் அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளனர். இதற்காக விஜய் கோட், சூட் அணிந்து மேடையேறி முதல்வராக பதவியேற்கவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர். பாஜக நிர்வாகிகள் நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டுள்ளனர்.
சட்டமன்ற தேர்தலில் தவெக தமிழகத்தின் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். ஆட்சியமைப்பதற்கு தேவையான 118 தொகுதிகள் அவர்களிடம் இல்லை. காங்கிரஸ் முதல் ஆளாக தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தது. இதேபோல சிபிஐ, சிபிஎம், விசிக, ஐயூஎம்எல் கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தன. பெரும்பான்மை கிடைக்காததால் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்பது தாமதமாகி வந்தது.

நேற்று ஆட்சி அமைப்பதற்கு தேவையான ஆதரவுகள் அவருக்கு கிடைத்துவிட்டது. இதனால் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் அவரை ஆட்சி அமைக்க அழைத்துள்ளார். விஜய் முதலமைச்சராக பதவியேற்கும் நிகழ்வில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.
தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியுள்ள சிபிஎம் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன், விசிக துணை பொதுச்செயலாளர் வன்னிஅரசு ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்வுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அந்தக் கட்சியின் மற்றொரு முக்கிய தலைவரான தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். மேலும் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆனந்த், அதிமுக லால்குடி எம்எல்ஏ லீமா ரோஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகளும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications