தமிழ்த் தாய் வாழ்த்தை முந்திய வந்தே மாதரம்! விஜய் பதவியேற்பு விழாவில் மாற்றம் ஏன்?
சென்னை: தவெக தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்கும் நிகழ்வில் தமிழ்த் தாய் வாழ்த்துக்கு முன்பு வந்தே மாதரம் பாடப்பட்டது. மத்திய அரசு உத்தரவின்பேரில் அரசு நிகழ்வில் வந்தே மாதரம் பாடப்பட்டது.

தமிழக அரசியல் வரலாற்றில் இன்று ஒரு புதிய சகாப்தம் தொடங்கியது. ஜோசப் விஜய் தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்றார். இந்நாள் தமிழ்நாட்டு மக்களுக்கு மறக்க முடியாத திருநாளாக அமைகிறது. மாநிலம் முழுவதும் உற்சாக ஏற்பாடுகளும், கொண்டாட்டங்களும் களைகட்டின.
இந்த விழாவுக்கு ராகுல்காந்தி, மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், வன்னியரசு, செல்வப்பெருந்தகை, நயினார் நாகேந்திரன், தமிழிசை சவுந்திரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அது போல் திரிஷா, சஞ்சீவ், அர்ச்சனா கல்பாதி, மார்ட்டின், விஜிபி சந்தோஷம் உள்ளிட்டோர் வந்திருக்கிறார். விஜய்யின் தாய் ஷோபா, தந்தை சந்திரசேகர், விஜய்யின் உறவினர்கள் எல்லாம் வந்திருக்கிறார்கள்.
விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்திருக்கிறார். அதனால் அவர் வரவில்லை. அது போல் விஜய்யின் குழந்தைகள் சஞ்சய், திவ்யா சாஷா வந்திருக்கிறார்களா என பார்த்த போது அவர்களும் வரவில்லை.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் காலை 10 மணியளவில் தொடங்கிய இந்த விழா, தமிழகப் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தலைமையில் பிரம்மாண்டமாக அரங்கேறியது.
தமிழக அரசு விழாக்களில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது வழக்கம். ஆனால் விஜய்யின் பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதற்கு முன்னர் வந்தே மாதரம் பாடப்பட்டது பேசுபொருளாகியுள்ளது.
மத்திய அரசு விழாக்களில் முதலில் வந்தே மாதரம் பாடப்பட வேண்டும் என்ற உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் விஜய்யின் பதவியேற்பு விழாவில் வந்தே மாதரம் பாடப்பட்டதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
ஆனால் பதவியேற்பு விழாவை மாநில அரசு நடத்தவில்லை. இதை ஆளுநர் மாளிகைதான் நடத்துகிறது. இதனால்தான் முதலில் வந்தே மாதரம் பாடப்பட்டது. விஜய்யை போல் அனைவரும் ஆண்டவன் மீது ஆணையிட்டு பதவியேற்றனர்.
இந்த விழாவில் முதல்வராக விஜய் பதவியேற்றதும், அமைச்சர்கள் ஆனந்த்,ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், நிர்மல் குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா ஆகியோர் பதவியேற்றனர். இதைத் தொடர்ந்து மீண்டும் வந்தே மாதரமும், தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது. விஜய் முதல்வரான நிலையில் தமிழகம் முழுவதும் கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன.
நேரு ஸ்டேடியத்திற்கு வெளியே விஜய் விஜய் என தொண்டர்கள் முழக்கமிட்டு வருகிறார்கள். ஆங்காங்கே பட்டாசு வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருகிறார்கள். இந்த விழாவில் விஜய், அமைச்சர்கள், ஆளுநர் அர்லேகர் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.












Click it and Unblock the Notifications