ஆன்லைன் உணவு டெலிவரிக்கு அதிரடி தடை.. பெங்களூர் பள்ளிகள் உத்தரவு.. இப்படியொரு காரணமா? செம
பெங்களூர்: பெங்களூரில் உள்ள பல்வேறு பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைனில் ஆர்டர் செய்யும் உணவுகள் வழங்க அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு தற்போது பலரும் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில் அதன் பின்னணி பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

பெங்களூரில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு அவர்களின் பெற்றோர் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து டெலிவரி ஊழியர்கள் மூலமாக அனுப்பி வைப்பது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக மாணவ-மாணவிகளின் பெற்றோர் இருவரும் பணிக்கு செல்வதால் வீட்டில் சமைக்க முடியாத நிலை உள்ளது.
இதனால் அவர்கள் தங்கள் குழந்தைகளின் லஞ்ச் பிரேக்கை கணக்கிட்டு உணவுகளை ஆன்லைனில் ஸ்விக்கி, ஜோமட்டோ உள்பட பிற ஆன்லைன் டெலிவரி ஊழியர்கள் வழியாக அனுப்பி வைக்கின்றனர். இந்நிலையில் தான் பெங்களூரில் உள்ள பல்வேறு தனியார் பள்ளிகள் மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் உணவு டெலிவரிக்கு அதிரடியாக தடை விதித்துள்ளன.
இதுதொடர்பாக பனசங்கரியிலுள்ள வித்யாஷில்ப் பள்ளி நிர்வாகம் சார்பில் ஆன்லைன் உணவுகளை மாணவ-மாணவிகளுக்கு டெலிவரி செய்ய அதிரடியாக தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக மாணவர்களின் பெற்றோருக்கு சர்க்குலர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில், ''பள்ளி வளாகத்திற்குள் ஸ்விக்கி (Swiggy),ஜோமட்டோ (Zomato) போன்ற ஆன்லைன் செயலிகள் மூலம் உணவு விநியோகம் (Food Delivery) செய்வது தடை செய்யப்பட்டுள்ளது'' என கூறப்பட்டுள்ளது.
இதுபற்றி அந்த பள்ளியின் முதல்வர் பூர்ணிமா மகேஷ் கூறுகையில், ''தொடக்கத்தில் ஒருவர் தனது குழந்தைக்கு இனிப்புகளை ஆன்லைனில் ஆர்டர் செய்து வைத்தார். நாளடைவில் தினசரி குறைந்தது 4 முதல் 5 உணவு டெலிவரிகள் பள்ளி வளாகத்திற்குள் வருகிறது. இது பிரச்சனையாக மாறி வருகிறது. இதனால் மேலும் வெளியில் இருந்து வரும் உணவுகள் சத்தானதாக இல்லை. சுகாதாரமின்றியும் உள்ளது. பல உணவுகளில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எண்ணெய் மற்றும் உப்புகள் மற்றும் பெர்சர்வேட்டிவ்கள் உள்ளன. இது மாணவர்களின் உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
மேலும் பள்ளி மாணவர்கள் வீட்டில் சமைக்கும் உணவை மதித்து சாப்பிட வேண்டும் என்று விரும்புகிறோம். ஒரு குழந்தை வீட்டில் சமைத்த உணவைக் கொண்டு வரும்போது, அங்கு ஒரு குடும்பமும் சமூகமும் ஒன்றிணைகிறது. ஒருவேளை பெற்றோரால் சமைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் அவர்கள் ஆரோக்கியமான உணவை வீட்டிற்கு ஆர்டர் செய்து அதனை லஞ்ச் பாக்ஸில் வைத்து பள்ளிக்கு கொடுத்துவிட வேண்டும் என்று கூறியுள்ளோம்'' என்றார்.
இந்த பள்ளியை தொடர்ந்து தற்போது பெங்களூரில் பிற பள்ளிகளும் இத்தகைய ஆன்லைன் உணவு டெலிவரிக்கு தடை விதித்துள்ளன.
மேலும் பள்ளி மாணவ-மாணவிகள் முன்மாதிரியாக இருக்கும் வகையில் இந்த பள்ளிகள் பள்ளிகள் தங்களது ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களும் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்வதற்குத் தடை விதித்துள்ளன.
இதுபற்றி லிட்டில் பிளவர் பப்ளிக் பள்ளியின் முதல்வர் காயத்ரி கூறுகையில், '' இத்தகைய பழக்கங்கள் மாணவர்கள் இடையே வேறுபாட்டை உருவாக்குகிறது. ஒரு குழந்தை பீட்சா சாப்பிடும்போது இன்னொரு குழந்தை வீட்டில் இருந்து வரும் புலாவ் உணவை சாப்பிடும்போது அவர்களின் மனதில் குழப்பத்தையும், வேறுபாட்டையும் ஏற்படுத்தலாம். மேலும் குழந்தைகள் வீட்டிற்கு சென்று தங்களுக்கும் அதேபோன்ற உணவை ஆர்டர் செய்து அனுப்பும்படி அடம்பிடிக்கலாம். இது பெற்றோருக்கும் சிரமத்தை தரும்'' என்று கூறியுள்ளார்.
மேலும் ஓசூர் ரோட்டில் உள்ள என்பிஎஸ் பள்ளியின் இயக்குநர் மற்றும் முதல்வர் உஷா மகேஷ் ரெட்டி கூறுகையில், ''பள்ளிக்கு வெளியே இருந்து வரும் டெலிவரி ஊழியர்கள் பள்ளி நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் இல்லை. இதனால் பாதுகாப்பு சார்ந்த பிரச்சனை வரலாம். இதனால் அடிக்கடி வரும் டெலிவரிகளை நிர்வகிப்பது பள்ளிக்கு நிர்வாக ரீதியிலான சவால்களை உருவாக்குகிறது. இதனால் தற்போது தடை விதித்துள்ளோம்'' என்றார். தனியார் பள்ளிகளின் இந்த உத்தரவை சமூக ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications