7 பேர் உயிரை குடித்த அம்மோனியா.. திருவள்ளூர் ஆலைக்கு சீல்.. NDRF கட்டுப்பாட்டில் தொழிற்சாலை!
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே மஞ்சங்கரணை கன்னிகைப்பேர் பகுதியில் இயங்கி வரும் தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் அம்மோனியா வாயுக் கசிவு, ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. இந்த கோர விபத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 70-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, மறு அறிவிப்பு வரும் வரை அந்த ஆலை இயங்குவதற்குத் தமிழக அரசு அதிரடியாகத் தடை விதித்துள்ளது. 3 நாட்களுக்கு தொழிற்சாலை தேசிய பேரிடர் மீட்புப் படையின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நள்ளிரவில் பயங்கரம் - என்ன நடந்தது?
இறால்களை நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் பதப்படுத்துவதற்காக, அந்த ஆலையில் உள்ள குளிரூட்டும் அமைப்புகளில் (Refrigeration Plants) அம்மோனியா வாயு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் இருந்தபோது, திடீரென வாயு குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது.
அம்மோனியா வாயு காற்றில் கலந்த சில நிமிடங்களிலேயே, அங்கு வேலை செய்துகொண்டிருந்த 70-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு கடுமையான மூச்சுத்திணறல், கண்கள் எரிச்சல் மற்றும் மயக்கம் ஏற்பட்டது. நச்சு வாயுவின் வீரியம் தாங்காமல் பலரது மூக்கு மற்றும் வாயிலிருந்து ரத்தம் கொட்டியது பார்ப்போரைக் கதிகலங்கச் செய்தது.
மீட்புப் பணியும் உயிரிழப்புகளும்
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மீட்புப் படையினரும், காவல்துறையினரும் விரைந்து வந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டனர். அவர்கள் மஞ்சங்கரணை, செங்குன்றம் மற்றும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், சிகிச்சை பலனின்றி ஒரு பெண் உட்பட 7 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதால், உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது.
விபத்து நடந்த இடத்தை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கவிதா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், இந்த விபத்துக்குக் காரணமான இறால் பண்ணை உரிமையாளர்களான மோகன், ஜோசப் ஆகிய இருவரையும் காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்துள்ளனர்.
3 நாட்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) வசம் ஆலை
வாயுக் கசிவின் தாக்கம் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படும் வரை, அந்தத் தொழிற்சாலை வளாகம் அடுத்த 3 நாட்களுக்குத் தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. காற்றில் மேலும் நச்சுத்தன்மை பரவாமல் தடுப்பதற்கான நவீன பாதுகாப்பு வழிமுறைகளை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி மற்றும் மறு உத்தரவு வரும் வரை ஆலை இயங்க முழு தடை விதிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.
முதல்வர் அதிரடி உத்தரவு - விசாரணைக் குழு அமைப்பு
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், இந்த விபத்து குறித்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன், விபத்து குறித்து முழுமையாக விசாரித்து 24 மணி நேரத்திற்குள் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதற்காக, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் சாந்தாராம் தலைமையில் ஒரு உயர்மட்ட விசாரணைக் குழுவை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைத்துள்ளது. மேலும், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் ஸ்டான்லி மருத்துவமனைக்கு நேரில் சென்று, பாதிக்கப்பட்டுச் சிகிச்சையில் உள்ளவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்துள்ளனர்.
அம்மோனியா வாயு ஏன் ஆபத்தானது?
இறால் மற்றும் மீன் பதப்படுத்தும் ஆலைகளில் குளிரூட்டல் தேவைக்காக அம்மோனியா பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இது காற்றில் கசியும்போது மனிதர்களின் சுவாசப் பாதையைக் கடுமையாகப் பாதிக்கும். அதிகப்படியான அம்மோனியாவைச் சுவாசித்தால், அது நுரையீரலில் உள்ள திசுக்களைச் சுட்டெரித்து, மூச்சுத்திணறலை ஏற்படுத்தி சில நிமிடங்களிலேயே மரணத்தை விளைவிக்கும் தன்மை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தொழிலாளர்களின் பாதுகாப்பில் தொழிற்சாலை நிர்வாகம் அலட்சியமாக இருந்ததே இந்த விபத்துக்குக் காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில், இந்த விசாரணைக் குழுவின் அறிக்கை விபத்தின் உண்மையான பின்னணியை வெளிக்கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications