நாய்களுக்கு ‘லைசென்ஸ்’ வாங்க போட்டி போடும் உரிமையாளர்கள்.. 3 நாட்களில் மட்டுமே இவ்வளவு அப்ளிகேஷனா?
சென்னை: சென்னையில் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் வாங்க கடந்த 3 நாட்களில் மட்டும் 2,300 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 930 பேருக்கு இதுவரை லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் சமீபத்தில் 5 வயது சிறுமி ஒருவரை நாய்கள் கடித்துக் குதறிய சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. தொடர்ந்து, வெவ்வேறு பகுதிகளில் வளர்ப்பு நாய்கள், மனிதர்களை கடித்த சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

இதையடுத்து மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க மாநகராட்சி பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்தது. குறிப்பாக நாய்களை வளர்ப்போர் கட்டாயம் சென்னை மாநகராட்சியில் பதிவு செய்து உரிமம் பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கு உரிய உரிமம் பெறப்பட்டுள்ளதா என்று மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் மூலம் வீடுகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வளர்ப்பு பிராணிகளுக்கு உரிமம் பெறாவிட்டால் ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறுவதற்காக, உரிமையாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். சிறுமியை நாய் கடித்த சம்பவத்திற்கு முன், அதாவது 5ஆம் தேதிக்கு முன்பு வரை 397 பேர் மட்டுமே, தங்கள் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் கோரி விண்ணப்பித்து இருந்தனர்.
சென்னை மாநகராட்சியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து, கடந்த 3 நாட்களில் மட்டும் 2,300 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில், 930 பேருக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது என்றும், மீதமுள்ள விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
நாய்களுக்கான லைசென்ஸ் கோரி வரும் விண்ணப்பங்களை தீவிரமாக ஆய்வு செய்து முறையான ஆவணங்கள் பெற்ற வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் வழங்கி வருவதாகவும், பதிவேற்றம் செய்யும் போது நாயின் புகைப்படம், வயது, இனம், ரேபிஸ் நோய் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் ஆகியவற்றை குறிப்பிட்டு பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வளர்ப்பு பிராணிகளுக்கு உரிமம் பெற விண்ணப்பிக்கும்போது 50 ரூபாய் கட்டணமாகச் செலுத்த வேண்டும். ஒரு முறை உரிமம் பெற்றதோடு நின்றுவிடாமல், ஒவ்வொரு ஆண்டும் நீங்கள் இதை ரூ.50 செலுத்திப் புதுப்பிக்க வேண்டும். அதையும் ஆன்லைனிலையே மேற்கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications