அதிமுக கொறடா உத்தரவை மீறிய 25 பேர்.. சபாநாயகர் ரூமில் இருந்து வரப்போகும் அந்த அறிவிப்பு இதுதானா?
சென்னை: அதிமுகவில் பிளவு இப்போது வெளிப்படையான மோதலாக மாறியுள்ளது.. இரு தரப்பும் தனித்தனியாக சபாநாயகரை சந்தித்து மனு அளித்துள்ளனர்.. இந்த அரசியல் நெருக்கடியில் சபாநாயகர் என்ன முடிவெடுப்பார் என்பதே அனைவரின் கேள்வியாக இருக்கிறது.. தமிழக அரசியலை அடுத்த சில நாட்களில் ஒரு பெரிய திருப்புமுனை காத்திருக்கிறது என சொல்கிறார்கள்.. நம்பிக்கை வாக்கெடுப்பில் என்ன நடந்தது?
தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்துள்ள நிலையில், அதன் பிறகான அரசியல் நகர்வுகள் கோட்டை வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளன.

25 அதிமுக எம்எல்ஏக்கள்
இந்த வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு ஆதரவாக 144 உறுப்பினர்கள் வாக்களித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் எஸ்பி வேலுமணி தரப்பைச் சேர்ந்த 25 எம்.எல்.ஏக்களும் அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததுதான் தற்போதைய சர்ச்சைகளுக்குக் காரணமாகும். கட்சியின் அதிகாரப்பூர்வ கொறடா உத்தரவை மீறி, ஆளும்கட்சிக்கு ஆதரவாக இவர்கள் செயல்பட்ட விவகாரம், அதிமுகவுக்குள் நிலவி வந்த உள்கட்சிப் பூசலை இப்போது சபாநாயகர் முன்பு கொண்டு வந்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி
விஷயம் வெளியான உடனேயே எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடங்கின. கட்சியின் கட்டுப்பாட்டை மீறி தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த 25 சட்டமன்ற உறுப்பினர்களின் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட அனைத்து முக்கியக் கட்சிப் பொறுப்புகளையும் உடனடியாகப் பறித்து, அவர்களைக் கட்சியிலிருந்தே நீக்குவதாக இபிஎஸ் அறிவித்தார்.
இந்தத் திடீர் நடவடிக்கையைத் தொடர்ந்து, அதிமுகவின் இரு தரப்பினரும் இப்போது சபாநாயகரைச் சந்தித்துத் தங்களது கோரிக்கைகளை முன்வைக்கத் தொடங்கியுள்ளனர்.
இதனிடையே, தலைமைச் செயலகத்தில் தற்போது இரு பிரிவினரும் முகாமிட்டு மனுக்களை அளித்து வருகிறார்கள். கொறடா உத்தரவை மீறிய வேலுமணி தரப்பின் 25 எம்.எல்.ஏக்களையும் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்று எடப்பாடி தரப்பு சபாநாயகரிடம் மனு கொடுத்துள்ளது.
வேலுமணி, எடப்பாடி தரப்பு
அதேசமயம், வேலுமணி தரப்பினரும் சபாநாயகரைச் சந்தித்து எடப்பாடி பழனிசாமி உட்பட 22 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரி மனு கொடுத்துள்ளனர். சபாநாயகரைச் சந்தித்துவிட்டு வெளியே வந்த அதிமுக எம்.எல்.ஏ விஜயபாஸ்கர், "கொறடா உத்தரவுக்கு எதிராகச் செயல்பட்டதால் தான் அவர்களைத் தகுதிநீக்கம் செய்யக் கோரியிருக்கிறோம்" என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த மோதலின் மற்றொரு பகுதியாக, சட்டமன்றக் கொறடா பதவி யாருக்கு என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எடப்பாடி தரப்போ, கட்சியின் பொதுச்செயலாளர் நியமித்த அக்ரி கிருஷ்ணமூர்த்தியைத்தான் கொறடாவாக அங்கீகரிக்க வேண்டும் என்கிறது.
ஆனால், தங்களுக்குத்தான் பெரும்பான்மை எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருக்கிறது என்றும், அதனால் சி.விஜயபாஸ்கரைத்தான் கொறடாவாக ஏற்க வேண்டும் என்றும் வேலுமணி தரப்பு சபாநாயகரிடம் மனு அளித்துள்ளது. இரு தரப்பு மனுக்களையும் பெற்றுக்கொண்டுள்ள சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், சட்டமன்றச் செயலாளர் சீனிவாசனுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சபாநாயகர் முடிவு என்ன
கோட்டை வட்டார தகவல்படி, இந்த விவகாரத்தில் சபாநாயகர் உடனடியாக எந்தவொரு இறுதி முடிவையும் அறிவிக்க வாய்ப்பில்லை. அதற்குச் சட்டரீதியாகக் கால அவகாசமும் உள்ளது. அதேநேரத்தில், கட்சி உத்தரவை மீறி அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அந்த 25 பேரின் பதவி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது பற்றிய எதிர்பார்ப்பு இப்போது கோட்டையில் அதிகரித்துள்ளது.
இன்னும் சில நாட்களில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தனது இறுதி முடிவை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுகவின் இந்த உள்கட்சி யுத்தம் சட்டமன்றத்திற்குள் வந்துவிட்ட நிலையில், கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் சபாநாயகரின் முடிவைப் பொறுத்தே அமையும் எனத் தெரிகிறது...!!












Click it and Unblock the Notifications